விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஆன்மீக கேள்வி பதில்:
கேள்வி: வீட்டில் ஏற்பாடு செய்து பூஜை செய்யும் பிள்ளையார் உருவம் எந்த அளவில் இருக்க வேண்டும்? அந்த சிலையை நீரில் கரைக்காமல் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமா?
பதில்: வரசித்தி விநாயக விரதமான பிள்ளையார் சதுர்த்திக்கு பிரதிமை முக்கியமாக களிமண்ணால் செய்ததாக இருக்க வேண்டும். விரத கல்பத்தில் மண்ணாலோ வெள்ளியாலோ தங்கத்தாலோ செய்யலாம் என்று எழுதியுள்ளது. உலோகங்களால் செய்யப்படும் விக்ரஹங்களை நீரில் நிமஜ்ஞனம் செய்வதில்லை. அவற்றை மீண்டும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
ஆனால் மண்ணால் செய்த பொம்மையை பூஜை ஆனவுடன் நிமஜ்ஞனம் செய்தே தீர வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பிள்ளையார் சதுர்த்தியன்று செய்யும் சிலையை மட்டும் மண்ணால் தான் செய்ய வேண்டும். இதனை ‘பார்த்திவ மூர்த்தி’ என்பார்கள். சிவபூஜையில் கூட ‘பார்த்திவ’ விங்கார்ச்சனை செய்வதுண்டு. அந்த லிங்கத்தை பூஜை ஆனபின்னர் நிமஜ்ஞனம் செய்து விடுவர்.
அதேபோல்
கணபதியையும் நீரில் கரையக்கூடிய மண்ணால் தயாரிக்க வேண்டும். பூமி தத்துவத்தால் செய்த பிள்ளையாரை மீண்டும் ஜல தத்துவத்தில் கரைக்கவேண்டும்.
யோகத்தின்படி கூட ஸ்தூல தத்துவத்தை சூட்சும தத்துவத்தில் லீனம் செய்து கொண்டே சென்றால் தான் பரதத்துவம் கிடைக்கும் என்பார்கள்.
வீட்டில் பூஜிக்கும் விக்ரஹங்கள் பெரியவையாக இருக்கக்கூடாது. விக்ரஹத்தின் அளவு பெரிதாக ஆனால் அதற்கான சாத்தியும் அதிகமாகும். அதோடு வீட்டுக்குள்ள கட்டுப்பாடுகளை அனுசரித்து விக்ரஹங்களை வழிபடவேண்டும்.
வீடுகளில் வழிபடும் உலோக விக்ரஹம் உள்ளங்கை அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மண் பிள்ளையார் சற்று பெரியதாக இருக்கலாமே தவிர பெரிய உருவங்களை வீடுகளில் பூஜிக்கக் கூடாது. வீடுகளில் பூஜிக்கும் லிங்கம் அங்குஷ்ட பிரமாணம் அதாவது கைப்பிடி அளவுதான் இருக்க வேண்டும்.
தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்