சென்னை:
ஜெனிவா, ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முயன்றதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், சிங்களர்களின் செயலைக் கண்டித்தும், இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு மதிமுக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கேள்விப்பட்ட தமிழ்புலிகள் அமைப்பினர், இலங்கை துணைத் தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பிரவீன்குமார் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் சென்றிருந்தனர்.
இவர்களை நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அவர்கள் திரும்பும் வழியில் சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள கடையில் திருமுருகன் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் வந்த காவலர்கள் திருமுருகன் காந்தி உட்பட 3 பேரையும் கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.