வாஷிங்டன்:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. ‘தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்’ என்ற இந்த நூலில் தான் மோடியின் தலைமை, அர்ப்பணிப்பு உணர்வு என பல விஷயங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நூலில், மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவரும் நாடும் சந்தித்த சவால்கள், மோடி செயல்படுத்திய புதுமையான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அலசப்பட்டுள்ளன. இவை தொடர்பான படங்களுடன் கூடிய விளக்கங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் நூலின் பிரதியை அமெரிக்க எம்.பி.,க்களான மார்கன் கிரிஃப்பித், தாமஸ் காரட் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். மேலும், மோடி ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேசிய அவர்கள், அவரின் செயல்பாடுகளுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.
இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பான ‘சுலாப்’ நிறுவனர் பின்டேஸ்வர் பதக் இந்த நூலை எழுதியுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறியபோது, ”மோடி, அரசியலில் அடிமட்டத்திலிருந்து வந்த தலைவர். இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக உள்ளார். அவரது தலைமையின் கீழ், 2019க்குள் இந்தியா 100 சதவீதம் துாய்மை பெறும்” எனக் கூறினார்.