மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சத இட ஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக சட்டமன்ற தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்ட அரசியலைக் கையில் எடுத்துள்ளார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின். வரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஸ்டாலினுக்கு ஆளுநர் ஒரு ‘கறார்’ கடிதம் எழுதியிருந்தார். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை தாம் சட்ட வல்லுநர்களிடம் கருத்தாய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும், எனவே இது குறித்து முடிவெடுக்க, சுமார் 3 முதல் 4 வாரம் கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
தனது இந்த முடிவை, தன்னை சந்தித்த மாநில அமைச்சர்கள் 5 பேர் குழுவிடமும் தெரிவித்திருப்பதாகவும் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆளுநர் கூறியுள்ளார்.
இவ்வாறு ஆளுநர் கூறியிருப்பதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமக்கு ஆளுநர் எழுதிய பதில் கடிதத்தை இணைத்து, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தனது டிவிட்டர் ப்திவிலும் இது குறித்து எழுதியுள்ளார் மு.க.ஸ்டாலின்
M.K.Stalin @mkstalin மருத்துவக் கல்வியில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை; அழுத்தம் தராமல் துரோகம் இழைக்கிறது அதிமுக அரசு! இணைந்து போராட அழைத்தேன்; @CMOTamilNadu-க்கு துணிச்சல் இல்லை! களம் காண்கிறது திமுக! அக்.24-இல் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்! மாணவர் நலன் காப்போம்! – என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருமாதம் கால அவகாசம் தேவை என ஆளுநர் கூறுவது, உள் இட ஒதுக்கீடு மசோதாவையே நீர்த்துப் போகச் செய்வதாகும் என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.