மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்
எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, நீட் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் ஆளுநர் ஒப்புதல் வழங்க தாமதமாகி வந்தது. ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு தாமதமானால், உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது
இந்த மசோதா மீது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் ஆளுநர் சட்ட ஆலோசனை கேட்டு, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கடிதம் அனுப்பியதாகவும், அதற்கான பதில் சொலிசிட்டர் ஜெனரலிடம் இருந்து நேற்று கிடைக்கப் பெற்றதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. .
இந்தக் கடிதங்களின் நகல்களை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, சட்ட ஆலோசனை கிடைத்த உடனேயே இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது
அந்தக் கடிதங்களில், ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு இசைவானதுதானா என்று ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றியுள்ள உள்ஒதுக்கீடு மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு இசைவானதுதான் என்று சொலிசிட்டர் ஜெனரல் கருத்து தெரிவித்துள்ளார். இதை அடுத்து, ஆளுநர் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.