சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பழங்குடியின மக்கள் மற்றும் பல்வேறு தரப்பு பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களை வாங்கிக் கொண்டுள்ளார். இதனை தனது டிவிட்டர் பதிவிலும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
நாரீசக்தி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப் பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வரும் சில பொருட்களை பிரதமர் மோடி வாங்கியுள்ளார். தான் வாங்கியுள்ள பொருட்கள் தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பொருட்களின் விவரங்களை பகிர்ந்துள்ளார். கைவினைப் பொருட்களால் உருவாக்கப்பட்ட காகித ஓவியம், சால்வை, துண்டு ஆகியவை குறித்து அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சியினர், பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.