மே 20 இன்று… மர்மமான முறையில் படுகொலையான தா.கிருட்டிணன் நினைவு நாள்!
சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். தா.கி. என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர்!
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் திராவிட இயக்க வரலாற்றின் அடையாளமாக வாழ்ந்தவர் பசும்பொன் தா. கிருட்டிணன்! சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக்கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று அரசியலில் ஈடுபட்டவர்.
நாடாளுமன்ற மக்களவையில் இரு முறையும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இரண்டு முறையும் பணியாற்றியவர். அவ்வாறு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 17 ஆண்டுகள் உறுப்பினராக சிறப்பாக விவாதங்களை ஆங்கிலத்தில் நிகழ்த்தியவர். தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து, தமிழகம் முழுவதும் சாலைகள் அமைத்த சாதனையாளர்.
1994 ஆண்டு மே மாதத்தில் அவர் மேலவையில் சேலம் ரயில் விபத்து குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒய். பி. சவான் பதிலுரையும் விளக்கமும் விவாதமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும் மதிக்கும் மென்மையும் மேன்மையும் மிக்கவர் தா.கிருட்டிணன். அடல்பிஹாரி வாஜ்பாய் உடன் இணைந்து 1990-1991 ஆம் ஆண்டில் ஐ. நா. மன்றத்துக்குச் சென்றார்.
தமிழகத்தில் அமைச்சராக இருந்த போது சிவகங்கையில் அரசு மகளிர் கல்லூரியும் விடுதியும் கொண்டு வர பாடுபட்டார். இது
வரலாற்று சாதனை. அவர் படித்த மன்னர் கல்லூரிக்கு எம். காம், எம்.எஸ்ஸி கணிதப் பாடங்கள் கொண்டு வரப் பெரு முயற்சி செய்தார்.
தன் அரசியல் வாழ்வை ஒரு நெறியாக நேர்மையாக நடத்திக் காட்டிய செம்மல். இந்திய அரசியல் வரலாற்றில் அவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறப்பாக உரையாற்றும் ஆளுமையாளர்.
தா.கிருட்டிணன், 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், தா. கிருட்டிணன் கொலை வழக்கில் மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்… இப்படித்தான் இன்றளவும் வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
அவர் கொல்லப்பட்டார் என்பது உண்மை. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஆட்சியில் இருந்த அப்போதைய அரசு, சாட்சிகளைக் கலைத்துத் தீர்ப்பைத் திசை மாற்றியதாகவே வரலாற்றில் பதியப் பட்டு விட்டது.
பின்னாளிலும், தமிழக அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்பது இன்னும் புரியாத புதிர்தான். அடுத்து வந்த அரசும் மேல்முறையீடு செய்யவில்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வழக்கை நீதிமன்றம் தானே எடுத்திருக்கலாம் அல்லது நாடாளுமன்றத்தின் சட்ட அமைச்சகம் மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட முயன்றிருக்கலாம். எதுவும் நடக்கவில்லை.
தா.கிருட்டிணனின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்பது இந்திய ஜனநாயகத்தில் இன்னும் கேள்வியாகவே இருக்கிறது.
ஜனநாயகம் தழைத்த இந்த நாட்டில் நீதித் துறை வலுவானது. மகத்தானது. எப்படி ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக உள்ளதோ, அதுபோல் கொலைக்குற்றம் செய்த குற்றவாளியும் தண்டிக்காமல் விடுபட்டு விடக்கூடாது. இது நீதித்துறையில் முன் வைக்கும் கேள்வியாகவே இன்றளவும் இருக்கிறது.
40 ஆண்டுக்கு மேல் பாடுபட்ட அவரது கட்சியும்கூட, அவரின் நினைவு நாளைப் போற்றவில்லை. குறைந்த பட்சம், இப்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் புதிய முதல்வர், தன் கட்சியின் மூத்த உறுப்பினருக்கான மரியாதையையும் அரசு சார்பில் அவருக்கு நினைவு நூலகமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோருகிறார்கள், சிவகங்கை ஊர்க்காரர்கள்!