7 ஜூன் இன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம் (WFSD) கொண்டாடப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு, தனி மனித சுகாதாரம், வேளாண்மை, சந்தை, உணவுப் பாதிப்புகளைக் கண்டறிந்து தடுப்பது போன்றவை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஐநா சபை 2018 ஜூன் மாதம் கூடி, அனைத்து வயதினரையும், குறிப்பாக குழந்தைகளையும், குறைந்த வருமானம் கொண்ட நாட்டு மக்களையும் பாதிக்கும் நோய்களின் உலகளாவிய சுமையை உணர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடவேண்டும் என்று அறிவித்தது. 2019 லிருந்து இந்த தினம் கொண்டாடப் படுகிறது. 2020 ஆம் ஆண்டில், உலக சுகாதார சபை உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்தகூடிய தீர்மானத்தை நிறைவேற்றியது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) உறுப்பு நாடுகள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினத்தை கடைபிடிக்க உதவுகிறது. உலகளவில் உணவு மூலம் பரவும் நோய்களின் சுமையை குறைப்பதற்கு பாடுபடுகிறது.
‘நாளைய ஆரோக்கியத்திற்காக இன்றைய பாதுகாப்பான உணவு’ என்பது 2021ம் ஆண்டிற்கான உலக உணவுப் பாதுகாப்பு தினக் கருப்பொருள்.
பாதுகாப்பான உணவின் உற்பத்தி மற்றும் நுகர்வு, நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுகிறது என்பதை இந்த தினம் வலியுறுத்துகிறது. மக்கள், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையிலான முறையான தொடர்புகளை அங்கீகரிப்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்பது இதன் நோக்கம்.
உணவுப் பாதுகாப்பு என்பது அரசாங்கம், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் ஆகிய அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பு. நாம் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பையும் உண்பவரின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் கடமையில் வேளாண் பண்ணை முதல் உணவு மேசை வரை அனைவருக்கும் பங்கு உண்டு.
எத்தனையோ சிறப்பு தினங்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்தக் கொரோனா காலத்திற்கு மிக ஏற்ற தினம் உணவுப் பாதுகாப்பு தினம்.