மனதின் எண்ணங்களை வெளியிட பொம்மை வடிவத்தில் எமோஜி மொழிகள் பிறந்தன. தினமும் சாட்டிங்கில் உபயோகிக்கும் எமோஜிகளின் தனித்துவம் என்ன? இவை எப்போது எங்கு பிறந்தன? உலகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் எமோஜி என்ன?
சோசியல் மீடியாவை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எமோஜி பற்றி தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய தேவையில்லை. சொற்களில் வெளிப்படுத்த இயலாத எண்ணங்களை இந்த எமோஜிகள் நாசூக்காக கூறிவிடும். முக்கியமாக வாட்ஸப்பில் சாட்டிங் செய்யும்போது பலரும் இவற்றையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
எமோஜியின் வரலாறு என்ன? ஜிமெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை பழக்கத்திற்கு வரும் முன்பு அதிகம் பேர் யாஹு மெயில், யாஹு மெசெஞ்சர்களை பயன்படுத்தினோம். சாட்டிங் செய்யும் போது எதிரில் இருப்பவர் தென்படமாட்டார். ஆதலால் அவருடைய எண்ணங்களை அறிவதற்குத் தோதாக யாஹூ இந்த எமோஜிகளைப் பயன்பாட்டிற்கு எடுத்து வந்தது. 2010 க்கு பிறகு இந்த எமோஜிகள் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸில் கூட வந்து சேர்ந்தன. ஆனால் எமோஜியைஅறிமுகப்படுத்திய பெருமை யாஹுவுடையது அல்ல. ஜப்பான் மொபைல் ஆபரேட்டிங் அமைப்பு என்டிடி டொகாமோ வில் பணிபுரிந்த ஷிகடகா குரிடா என்ற பொறியியல் வல்லுநர் இவற்றை வடிவமைத்தார்.
எமோஜிகளை யார் வேண்டுமானாலும் வெளியிட முடியாது. யூனிகோடு கன்சார்டியத்தின் ஒப்புதல் கிடைத்தபின்னரே ஒவ்வொரு ஆண்டும் இதனை வெளியிடுவார்கள். இவை ஒரு முறை மார்க்கெட்டில் வெளிவந்த உடனே ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் போன்ற மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்கள் தம் மொபைல்களில் இவற்றை பயன்படுத்தத் தொடங்கும். இந்த யூனிகோடு கன்சார்டியத்தில் நெட்பிளிக்ஸ், ஃபேஸ்புக், கூகுள், டிண்டர், ட்விட்டர் மற்றும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
வாட்ஸப்பில் கை அல்லது மனித முகத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அதில் ஸ்கின்டோன் (உடலின் நிறம்) காட்டப்படும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. அதில் எந்த உடல் நிறத்தில் உள்ளவர்கள் அந்த உடல் நிறத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஜெண்டர் நியூட்ரல் எமோஜிஸ் என்று அழைப்பார்கள்.
அதிகமாக உபயோகிக்கும் எமோஜிகள் இவையே…
லைக் எனப்படும் தம்ஸப், டியர்ஸ் ஆஃப் ஜாய் (ஆனந்த கண்ணீர்) , பறக்கும் முத்தம் போன்ற எமோஜிகள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.
ஜூலை 17 உலக ஏமோஜி தினத்தை நடத்த வேண்டும் என்ற யோசனை எமோஜிபீடியா அமைப்பாளர் ஜெரேமிபுர்ஜ் என்பவருக்குத் தோன்றியது. யூனிகோடு எமோஜி சப் கமிட்டியில் வைஸ் சேர்மனாக உள்ள இவர் எமோஜி தொடர்பான சிபார்சுகளை செய்தார். அவ்வாறு பயன்பட்டுக்கு வந்தவையே இன்றைய இந்த பொம்மை மொழிகள்.
இன்று மொபைலை கையில் வைத்துக்கொண்டு எமோஜி இல்லாமல் நாம் இல்லை என்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம் என்றால் அது மிகையில்லை. மகிழ்ச்சி, துயரம், கோபம் ஆத்திரம் கண்ணீர், பெருமை, வாழ்த்து, ஆசி, உடல்நிலை, மழை, வெயில் என்று எல்லாவற்றிற்கும் ஒரு எமோஜியை பிடித்துப் போட்டு நண்பர்களுக்கு பகிர்ந்து வருகிறோம்.
இன்று இந்த குட்டிக் குட்டி பொம்மைகளுக்கு அடிமையாகாதவரே இல்லை எனலாம்.
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்