சென்னை:
ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகளாக கடந்த 1980ஆம் ஆண்டு நான் பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவிடம் ஒப்படைக்கப்பட்டேன். தற்போதுதான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறவினர்கள் மூலமாக தெரியவந்தது. என் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கு எங்கள் குல வழக்கப்படி நடைபெறவில்லை. எனவே, அவரது உடலை தோண்டி எடுத்து, குல வழக்கப்படி சம்பிரதாய சடங்குகளை செய்ய எனக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது, இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில், நீதிபதி வைத்தியநாதன் முன்பு அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை பிப்ரவரி 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘எனது அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா இந்த பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரியே கிடையாது. என் பாட்டி சந்தியாவுக்கு, என் தந்தை ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் தான் வாரிசுகள். வேறு யாரும் கிடையாது. எனவே அம்ருதா தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.