இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக பட்ச சதங்களைக் கடந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை இந்நாள் கேப்டன் விராட் கோலி சமன் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 269 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்தார்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்து, அதிகபட்சமாக கங்குலி 11 சதம் அடித்துள்ளார். நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி அதனைச் சமன் செய்துள்ளார். 142 போட்டிகளில் கங்குலி 11 சதம் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 41 போட்டிகளிலேயே 11 சதம் அடித்துவிட்டார்.
விராட் கோலி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 33 சதம் அடித்துள்ளார். அதில் இந்திய அணியின் சேஸிங்கின் போது 20 சதங்கள் அடித்துள்ளார். அதில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.