புது தில்லி:
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினார், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் என்று அரசியல் மட்டத்தில் இன்று பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராணுவத்துடன் தங்களது அமைப்பை ஒப்பிட்டு பேசியதாக ஒரு அர்த்தத்தைக் கற்பித்து, மோகன் பாகவத்திற்கு தனது கடுமையான கண்டங்களைத் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பீகார் மாநிலம் முஜாஃபர்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மோகன் பாகவத், “ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களான நாம் ஒரு ராணுவ அமைப்பு கிடையாது. ஆனால், ராணுவத்தில் இருக்கும் கட்டுக்கோப்பும் உறுதியும் நம்மிடம் இருக்கிறது. நாட்டிற்கு தேவை ஏற்பட்டால், நாட்டின் அரசியலமைப்பும், சட்டங்களும் கேட்டுக்கொண்டால், வீரர்களை தயார்படுத்த பொதுவாக ஆறு அல்லது ஏழு மாத காலம் பிடிக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை நாம் மூன்றே நாட்களில் தயார் செய்துவிட முடியும். இது நமது திறமை” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் குறித்து பெருமிதமாகக் கூறினார்.
இதனைக் குறிப்பிட்டுள்ள, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள் கிழமை இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ராணுவத்தை அவமானப்படுத்திய பாகவத் வெட்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
“ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு, இந்தியாவிற்கே அவமானம். அவர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை அவமதித்திருக்கிறார். நமது தேசியக் கொடிக்கு மரியாதை செய்தவர்களை அவமதித்துள்ளார். வீரர்களையும், ராணுவத்தையும் அவமதித்த பாகவத் வெட்கப்படவேண்டும்” என்று ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
Mohan Bhagwat a man who chose to lead a bunch of jokers instead of joining the army shouldn’t even utter a word against the army. He should rather silently thank them everyday for letting him conduct his monkey business #RSSInsultsArmy
— Rahul Gandhi (@BeWithRG) February 11, 2018
1961,62 சீன ராணுவத்துடனான எல்லைப் பிரச்னை மோதலில் இந்திய ராணுவத்தை தாமதப் படுத்தி தோல்வியடையச் செய்யக் காரணமாக இருந்தவர் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அவரது கொள்ளுப் பேரன் ராகுல் இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராணுவத்தை தவறாகப் பேசியிருப்பதாக பொங்கி எழுந்திருக்கிறார். ஆனால் 1962 போரில் இந்திய ராணுவத்துக்கு உதவியதற்காக 63ம் வருட குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை சீருடையுடன் பங்கேற்க நேரு அனுமதித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.