சென்னை:
நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் புதன்கிழமை மதுரையில் தனது கட்சிச் சின்னத்தை அறிமுகம் செய்தார். அந்த சின்னமானது, மும்பையில் உள்ள செம்பூர் தமிழ்ச் சங்கத்தின் சின்னத்தை அப்படியே பிரதி எடுத்தது போலிருந்தது. இதனால் பலத்த சர்ச்சையும் கேலியும் எழுந்தது.
இந்நிலையில், கமலின் கட்சிக்காக, தங்களின் அமைப்பின் சின்னத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள் செம்பூர் தமிழ்ச் சங்கத்தினர். அந்த வகையில் தனது கட்சிச் சின்னம், வேறு ஓர் அமைப்பின் சின்னதைப் போன்றிருக்கிறது என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கமல்.
துபையில் நேற்று முன் தினம் இரவு காலமான நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மும்பை செல்கிறார் கமல். அதனை முன்னிட்டு, திங்கள் கிழமை இன்று மதியம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார் கமல்ஹாசன். அப்போது அவருடன் இருந்த சிலரை செய்தியாளர்களுக்கு அறிமுகப் படுத்தினார் கமல்ஹாசன். அதன் பின்னர் அவர் கூறியபோது,
ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பைக்குச் சென்ரு கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னர் மும்பையிலிருந்து இந்த நண்பர்கள் இங்கு வந்துள்ளனர்.
இந்த நண்பர்கள் மும்பையில் உள்ள ‘செம்பூர் தமிழ்ப்பாசறை’ அமைப்பினைச் சேர்ந்தவர்கள். கடந்த 21-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் சின்னமானது இவர்களது அமைப்பின் சின்னத்தை ஒத்திருப்பதாக கருத்துக்கள் வெளியானது.
எனவே எதிர்காலத்தில் எந்த விதமான சட்ட சிக்கல்களும் எழக் கூடாது என்பதால் அவர்கள் தாமாகவே மனமுவந்து சின்னத்தினை பயன்படுத்தும் முழு உரிமையினை எங்களுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்கள். இனி எந்த சிக்கலும் கிடையாது என்று கூறினார் கமல்ஹாசன்.
கமலின் கட்சிக்காக தங்களது அமைப்பின் சின்னத்தையே தியாகம் செய்துள்ளனர் மும்பை செம்பூர் தமிழ்ப் பாசறை அமைப்பினர்.