மும்பை:
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி குளியறையில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூருடன் துபைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அப்போது அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியானது. இதை அடுத்து நாடெங்கும் பலத்த அதிர்ச்சியை பலரும் வெளிப்படுத்தியிருந்தனர். மேலும், திருமண நிகழ்வில் அவர் ஆடிப் பாடிய வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
துபையில் நடிகை ஸ்ரீதேவி ஹோட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக அவரது உடற்கூறு அறிக்கையில் தகவல் வெளியானது.
குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழப்பு நிகழ்ந்ததாக உடல்கூறாய்வில் வந்த தகவலால், பரபரப்பு தொற்றியது. இதை அடுத்து துபை ஓட்டலில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து பலரும் விவாதிக்கத் தொடங்கினர். இதில் வேறு ஏதும் சதி இருக்குமா என்றும் கேள்விகள் எழுப்பப் பட்டன.
ஆனால், ஓட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளதாகவும், குளியல் அறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு தொட்டியில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீதேவி ரத்தத்தில் மதுபானம் கலந்திருப்பதும் உடல்கூறாய்வில் தெரியவந்துள்ளது. எனவே, மது அருந்திய நிலையில் அவர் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்திருக்கக் கூடும் என்றும் கூறப் படுகிறது. அல்லது மது அருந்திய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பைகொண்டு வரப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் உடலுக்கு திரையுலகப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதை அடுத்து, ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் செய்யும் பணி தொடங்கியது.
இருப்பினும், பலராலும் நேசிக்கப் பட்ட, ரசிக்கப்பட்ட நடிகையின் திடீர் மரணமும் அவரது மரணத்தில் தோய்ந்த மர்மமும் இன்னமும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.