மூடப்படுகிறது சர்ச்சைக்குரிய பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லம்…
புனித ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தில், உயிரிழந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முதியோர்களின் உடல்களை சட்டவிரோதமாக அடக்கம் செய்த அதிர்ச்சி அம்பலமாகிய நிலையில், காப்பகம் இரண்டு நாட்களில் மூடப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரத்தில் செயல்படும் ஆதரவற்றோர் காப்பகத்தில், முதியோர்களை கடத்துவது, இறந்தவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, உரிமம் புதுப்பிக்காமல் இயங்கியது என அடுக்கடுக்கான அதிர்ச்சித் தரும் புகார்கள் வெளிவந்தன.
இதையடுத்து, காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து புனித ஜோசப் ஆதரவற்றோர் காப்பக நிர்வாகி தாமஸ் சென்னையில் விளக்கமளித்தார்.
வாகனத்தில் காய்கறி மூட்டைகள் மத்தியில் சடலத்தை கொண்டு வந்தது தவறு தான் என்று அவர் அப்போது ஒப்புக்கொண்டார்.
உரிமம் புதுப்பிக்காமல் இயங்கியது குறித்து விளக்கமளித்த அவர், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காப்பக உரிமம் காலாவதி யாகியதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் புதுபிப்பதற்காக விண்ணப்பித்தும் கிடப்பில் போடப்பட்டதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார்.
மேலும், உடல்களை காப்பகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 2011 ஆம் ஆண்டே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்றதாக கூறினார்.
ஆனால், அவர் காட்டிய ஆவணங்கள், அனுமதி கோரி காப்பகம் சார்பில் விண்ணப்பத்த படிவங்களே தவிர, அனுமதிக்கான ஆவணங்கள் இல்லை.
காப்பகத்திலிருந்து முதியோரை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை முதல் காப்பகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முதியோரின் எலும்புகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் சுகாதாரத்துறை மருத்துவர் குழு ஆய்வு நடத்த உள்ளதாகவும் ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.