நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வந்து, பாஜக., மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரசாரம் மேற்கொள்கிறார்.
செவ்வாய்க்கிழமை நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி, மாலை கோண்டியாவில் இருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், ஜி.என்.செட்டி ரோடு வழியாக பனகல் பார்க் வருகிறார்.
ஜி.என். செட்டி ரோட்டில் வேலூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் முன்பு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் காரில் பனகல் பார்க் சென்றடைகிறார்.
பனகல் பார்க்கில் பிரதமர் மோடியின் சாலை உலா தொடங்குகிறது. இந்த ரோடு ஷோ, பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை நடக்கிறது. தென்சென்னை பாஜக., வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை பாஜக., வேட்பாளர் வினோஜ் செல்வம், வட சென்னை பாஜக., வேட்பாளர் பால்கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்கிறார்.
இந்த சாலை உலா நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி கிண்டி ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். மறுநாள் காலை சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர், செல்கிறார்.
வேலூரில், புதன் அன்று காலை 10.30க்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.50க்கு சென்னை வருகிறார். சென்னையில் இருந்து விமானப்படை விமானம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி நீலகிரி தொகுதி பாஜக., வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவு கோரி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அங்கே நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மீண்டும் கோவை திரும்பும் பிரதமர் மோடி விமானப்படை விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்துக்குச் செல்கிறார்.
முன்னதாக, சென்னையில் பிரதமர் மோடியின் சாலை உலா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார். பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரை பார்வையிட்டு வரவேற்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் திரளும் இடங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
அதே போல், பிரதமர் மோடியின் வருகை, சுற்றுப்பயணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை, வேலூர், நீலகிரி மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழகத்தில் நடைபெறும் முதல் கட்டத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் களத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். எனினும் பல வேட்பாளர்கள் மாலை 4 மணிக்கு மேல் தான் களத்தில் இறங்கி வருகின்றனர். பகல் நேரத்தில் பிரசாரங்களுக்கு வேட்பாளர்கள் பலரும் செல்வதில்லை.
ஆயினும், பிரதமர் மோடி மிகத் தீவிரமாக இடைவிடாத பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு, பாஜக.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஏப்ரல் 7 ஞாயிறு நேற்று ஒரே நாளில், பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வயது உடல் சோர்வு இவற்றை எல்லாம் கடந்து, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 3 மாநிலங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டது வியப்புடன் பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலம் நவ்டாவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சாலை உலா (ரோடு ஷோ)வில் பங்கேற்றார். பின்னர் மேற்கு வங்க மாநிலத்துக்கு பயணித்த அவர், ஜல்பைகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இடைவிடாமல் ஓய்வின்றி மக்களை சந்தித்து வரும் பிரதமர் மோடி, நாளை தமிழகத்துக்கும் வந்து பாஜக.,வுக்கு ஆதரவு திரட்டுகிறார்.