பணிப்பெண்ணை உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வற்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சவுதி அரேபிய இளவரசரை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் கைது செய்து உள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில், சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.
இந்த மாளிகையின் சுமார் 8 அடி உயர மதில் சுவரை தாண்டி குதித்து ரத்தக் காயங்களுடன் தப்பிவந்த ஒரு இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அப்போது தன்னுடன் உடல் உறவு வைத்துகொள்ளுமாறு இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் தன்னை கட்டாயப்படுத்தி வற்புறுத்தியதாக புகாரில் தெரிவித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சவுதி இளவரசரின் மாளிகைக்கு சென்று கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேரை அங்கிருந்து வெளியேற்றினர்.
பின்னர் இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத்தை கைது செய்தனர். இளவரசர் மீது புகார் அளித்த பெண், இளவரசர் வீட்டில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்த போலீசார், கைது செய்யப்பட்ட இளவரசர் மீது, மேலும் நான்கு பெண்கள் இதே குற்றச்சாட்டை கூறியுள்ளனர். இதையடுத்து, இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் மீது பெண்ணை உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தி வற்புறுத்திய குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட சிலமணி நேரங்களில் அவர் 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஜாமினில் விடுவிக்கபட்டார். இந்த வழக்கில் இளவரசர் மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் அக்டோபர் 19ம் தேதி விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.