சென்னை: தீபாவளி நாளில் தமிழகத்தில் கன மழை கொட்டப் போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ.6 முதல் 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பருவமழை வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெறக்கூடும் என்றும், எனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், நவம்பர் 6ஆம் தேதிக்கு முன்னர் கரை திரும்ப வேண்டும் என்றும் கூறினார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 6 ஆம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், வரும் 7, 8 ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவின் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.