ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என என காங்கிரஸ் கட்சி இது வரை அறிவிக்கவில்லை; திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிய மட்டுமே செய்து இருக்கின்றார் என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநாடு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறு கின்றது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வியட்நாம், ரஷ்யா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டியது, விஷாலை கைது செய்தது ஜனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்தார்.விஷாலை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த அவர், விஷால் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் மூலம் விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் வெற்றி கிடைத்தது என தெரிவித்த அவர்,அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை இதில் எப்படி வந்தது? என கேள்வி எழுப்பினார்.
இதில் அரசியல் தலையீடு கண்டிப்பாக உள்ளது என தெரிவித்த அவர், முதல்வர் வரை இதை கொண்டு செல்ல வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார். எதிர் அணியில் இருப்பவர்களில் ஒருவர் பாஜக, ஒருவர் அதிமுக எனவும் தெரிவித்த அவர், அதனால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போல் இந்த இரு நாட்கள் சம்பவம் இருந்தது எனவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின் , பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்தார் எனவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வில்லை எனவும், ஆனால் பிரதமராக வருவதற்கு எல்லா தகுதிகளும் ராகுலுக்கு உண்டு எனவும் தெரிவித்தார்.
ரபேல் விவகாரத்தில் பாஜக அல்ப தனமாக வெற்றி என்று சொல்லி வருகின்றனர் என கூறிய குஷ்பு ரபேல் விவகாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்தார்.
கணினியில் தகவல் எடுக்கலாம் என உளவு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்திரவு வழங்கி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உள்ளது என தெரிவித்த அவர், இந்த திட்டம் பொதுமக்களுக்கு மட்டுமா? டெல்லி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருப்பவர்களுக்கு இது பொருந்தாதா எனவும் கேள்வி எழுப்பினார்.
2 ஆண்டுகளாக நாங்கள் சொன்ன போது குறைக்காத ஜி.எஸ்.டி. தற்போது 5 மாநில தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்ட பின் குறைத்து உள்ளனர் என தெரிவித்த குஷ்பு, ஆரம்பத்தில் ஏன் இதை செய்ய முடியாது என்று சொன்னார்கள்? எனவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி நான் தான் ராஜா நான் தான் மந்திரி என்று இருப்பதாகவும் அவரை என்.ஆர்.ஐ. பிரதமர் என்று தான் சொல்ல வேண்டும் என கூறிய குஷ்பு வெளிநாட்டில் தான் போடி அதிகமாக இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
பிரதமரால் பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு செல்ல முடியும் போது, புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளை சந்திக்க மட்டும் ஏன் முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.
அதிமுக , பாஜகவின் கை கிளவ்ஸ் போல தான் செயல்படுகின்றது எனவும் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என தெரிவித்த அவர், பாஜக, அதிமுகவை வேறு வேறாக பார்க்கவில்லை. பாஜக சொல்வதை தான் அதிமுக செய்கிறது என்றார்.
பாஜக 4 ஆண்டுகளில் முடியாததை தான் இப்ப தான் சொல்லி வருகின்றனர் எனவும் 2014 ல் சொன்னது எதுவும் மக்களிடம் கொண்டு செல்லவில்லை, விளம்பரத்திற்காக செய்கின்றனர் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஒரு விளம்பர பிரியர் என தெரிவித்த அவர், பரக் ஒபாமா வரும்போது, யு.பி.ஏ. அரசு தான் அமெரிக்கா-இந்தியா உறவு பலமாக இருப்பதற்கு காரணம் என்றார்.
இந்திய நாடு உலக அளவில் மிகப்பெரிய நாடு என்று சொல்வதற்கும், பலமான நாடு என்று சொல்வதற்கும், பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அளிக்கப்படும் வரவேற்புக்கும் கடந்த 55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் எனவும் குஷ்பு தெரிவித்தார்.