பத்தனம்திட்ட: சபரிமலை சந்நிதிதானத்துக்கு தரிசனம் செய்ய சென்னையில் இருந்து சென்ற இளம்பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும், அவர்களை சுவாமி தரிசனத்துக்கு செல்ல விடாமல் விரட்டியடித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து, சபரிமலை போர்க்களம்போல மாறியது. பம்பை பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் குவிக்கப் பட்டனர். பக்தர்களின் தீவிர விழிப்பு உணர்வாலும், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வாலும் இதுவரை இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லை!
மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்ட சபரிமலை சந்நிதிதானத்தில், வரும் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜைக்கு சில நாட்களே உள்ள நிலையில் தற்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி, இளம் பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்துவிடக்கூடாது என்ற தீவிர விழிப்பு நிலையில் ஐயப்ப பக்தர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு வரும் 27-ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த இளம்பெண்கள் சிலர், அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் செல்வி தலைமையில் சபரிமலைக்குச் செல்லப் போவதாக அறிவித்தனர். அதற்காக, தங்கள் குழுவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 30 பேர் இடம் பெறுவதாகவும் கூறி, தங்களுக்கு கேரள அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி பிணரயி விஜயனுக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.
அதன் அடிப்படையில், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் படும் என்று கூறப்பட்டு, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதேநேரம் சென்னை இளம்பெண்கள் சபரிமலை வர ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் சபரிமலை வந்தால் தடுத்து நிறுத்துவோம் என்று அறிவித்தனர்.
இதனிடையே திட்டமிட்டப்படி மனிதி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 11 இளம்பெண்கள், ஒருங்கிணைப்பாளர் தோழர் செல்வி தலைமையில் சென்னையில் இருந்து வேன் மூலம் சபரிமலை புறப்பட்டனர். அவர்கள் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக பத்தனம்திட்ட பின்னர் பம்பையை அடைவார்கள் என்று கூறப் பட்டது. ஆனால், அவர்களை தடுத்து நிறுத்த ஐயப்ப பக்தர்கள் ஆங்காங்கே பெருமளவில் திரண்டதால், அவர்களின் பயணத் தடம் மாற்றப் பட்டது. கம்பமேடு, முண்டகாயம் வழியாக பம்பைக்கு இன்று அதிகாலை 5.30க்கு வந்தனர்.
பம்பை சென்றதும் சென்னை பெண் பக்தர்கள் 11 பேரும் வேனில் இருந்து இறங்கினார்கள். அங்கு தயாராக இருந்த போலீசாரும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். அந்த பெண் பக்தர்கள் அங்கிருந்த குருசாமிகளிடம் தங்களுக்கு இருமுடி கட்டும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் யாரும் அவர்களுக்கு இருமுடி கட்டவில்லை. ஐயப்ப பக்தர்களும் சென்னை இளம்பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தக் குழுவில் உள்ள 6 பெண்கள் தாங்களாகவே இருமுடி கட்டிக் கொண்டனர்.
சென்னையில் இருந்து வந்த அனைவருமே கருப்பு சேலை, கறுப்பு சுடிதார் அணிந்து, சாமியே சரணம் ஐயப்பா… என்று கோஷம் எழுப்பியபடி, பெருவழி பாதையில் சன்னிதானம் நோக்கி நடக்க தொடங்கினர். 5 கி.மீ., தொலைவு அவர்கள் சென்றதும் அதற்கு மேல் அவர்களை முன்னேறிச் செல்ல விடாமல் பக்தர்கள் தடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் சென்னை பெண் பக்தர்கள் 11 பேரும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதை அடுத்து, அவர்கள் தரையில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு சற்று தொலவில் ஐயப்ப பக்தர்களும் தரையில் அமர்ந்து சரணகோஷம் எழுப்பி எதிர்ப்பு கிளப்பினர். போலீசாரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பாக சூழ்ந்து நின்று கொண்டனர்.
இருப்பினும், பக்தர்கள் போராட்டம் காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் இருப்பதாக போலீசார் கூறிய போதும், சென்னை பெண் பக்தர்கள் தாங்கள் சபரிமலை சென்றே தீருவோம் என பிடிவாதம் பிடித்தனர்.
அவர்களிடம் ஜனம் டிவி நிருபர் கேள்வி எழுப்பியபோது, எங்கள் குழுவைச் சேர்ந்த மேலும் பல பெண்கள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர். எங்கள் அனைவருக்குமே போலீஸார் பாதுகாப்பு தருவதாக முதலில் கூறினார்கள். அதனால்தான் நாங்களும் வந்தோம். ஆனால் இப்போது பக்தர்கள் போராட்டத்தை காரணம் காட்டி, பாதுகாப்பு வழங்க முடியாது என்று மறுத்துவிட்டார்கள் என்று கூறினர்.
இதுகுறித்து பத்தினம்திட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பேசியபோது, சென்னை பெண் பக்தர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தை கண்காணித்து வருகிறோம். நிலைமை மீறிப் போனால் அவர்கள் மீது வழக்குகள் போடுவோம். சென்னை பெண்களுக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்குவார்கள் என்று கூறினார். #Sabarimala
இருப்பினும், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்த பெண்கள், ஒரு கட்டத்தில் பக்தர்களின் போராட்டத்தைக் கண்டு, எழுந்து ஓட்டம் பிடித்தனர். அப்படி ஓடிய போது, ஒரு பெண் அடுத்தவரிடம் செல்வி தோழர் எங்கே என்று கேட்பது பதிவுகளில் தெளிவாகக் கேட்டது. இதனால், கம்யூனிஸ்ட் பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு காந்த மலையில் என்ன ஜோலி என்று வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.