சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த வசதியையும் தமிழக அரசு பொன்.மாணிக்கவேலுக்கு செய்து தரவில்லை!
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது தமிழக அரசு.
முன்னாள் ஐ.ஜி.யான அவர், தனது கார் நிறுத்தப் படும் இடத்திலேயே இருந்து கொண்டு, தனது பணிகளை கவனித்து வந்தார். நீதிமன்றத்தால் அமர்த்தப் பட்ட அதிகாரிக்கு தமிழக அரசு செய்த மிக மோசமான பழிவாங்கும் செயலாக அது பார்க்கப் பட்டது. கார் ஷெட்டில் அமர்ந்து அவர் வேலை செய்தது ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார் பொ்ன்.மாணிக்கவேல்.
இதை அடுத்து சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? என்று அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறியவே பொறுமையாக இருக்கிறோம் என்று கூறியது நீதிமன்றம்.
சிலைக்கடத்தல் தடுப்பு வழக்கில் ஆவணங்கள் ஒப்படைக்கவில்லை என்றும், டிஎஸ்பி பன்னீர்செல்வம் ஆவணங்களை தரவில்லை; தனக்கு ஒதுக்கப்பட்ட வசதிகளில் 1% மட்டுமே செய்து தரப்பட்டது என்றும் பொன்.மாணிக்கவேல் புகார் கூறினார்.
இதை அடுத்து, நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து அவமதிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாதா? என்று அரசு, காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் தமிழக அரசை கண்டித்தனர்.
குற்றத்தின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது கண்டறியப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் புகாருக்கு ஜன-24 ஆம் தேதிக்குள் டிஜிபி பதில் தர ஆணை பிறப்பித்தனர்.