நேற்று ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம், பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தான்!
இதில், ராமதாஸை தங்கள் கேள்விகளால் திக்குமுக்காடச் செய்தனர் ஊடகவியலாளர்கள். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல், அவ்வப்போது ஆத்திரப் பட்டார், உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ சொன்னார் அன்புமணி.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, துவக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் பதிலளித்த அன்புமணி, நிருபர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் வாக்கு வாதங்களில் ஈடுபட்டார்.
இந்திரா காந்திக்கு எதிராக திமுக இருந்த சம்பவத்தை கொச்சப்படுத்தி குறிப்பிட்ட அன்புமணியிடம், திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைப்பது பெற்ற தாயோடு உறவு வைப்பதற்கு சமம் என டாக்டர் ராமதாஸ் கருத்து கூறி விட்டு, இப்போது கூட்டணிக்காக பரிந்து பேசுவதால் உங்களுக்கு நெருடல் இல்லையா என்ற கேள்விக்கு, நெருடலே இல்லை. உங்களுக்கெல்லாம் தான் நெருடல் இருக்க வேண்டும் என சன் டிவி.,யை ஆவேசத்துடன் குறிப்பிட்டு எரிச்சலடைந்தார்.
பின், சன் டிவி., செய்தியாளரின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் தவிர்த்தார். ஆயினும் சன் டிவி செய்தியாளர் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு பேசவிடாமல் தடுக்க, அவரை வேண்டுமென்றே ஆவேசத்துடன் புறக்கணித்தார் அன்புமணி.
தொடர்ந்து கேள்வி எழுப்பிய டைம்ஸ் நவ் நிருபருக்கு பதிலளிக்காமல், அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள் என அன்புமணி ஆத்திரப்பட்டு அதட்டினார்.
பத்து கோரிக்கைகளில் 8 வழிச் சாலை பற்றி இல்லை, ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டக் கூடாது என்ற உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்பன உள்ளிட்ட சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அன்புமணி திணறினார்.
தொடர்ந்து தாம் கோபப்பட்டுக் கொண்டு, ஆனால் செய்தியாளர்கள் ஏன் ஆத்திரப் பட வேண்டும், கோபப்பட வேண்டும் உங்கள் கட்சிகளின் தலைவர்கள் கூட இப்படி கோபப் படமாட்டார்கள் போலிருக்கிறதே என சமாளிக்க முயன்ற அன்புமணி, ஒரு கட்டத்திற்கு மேல், கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் சந்திப்பை முழுமையாக முடிக்காமலும் அதிருப்தியுடன் வெளியேறினார்.
இந்நிலையில், இன்று பாமக.,வினர் டிவிட்டர் பதிவுகளில் விளையாடினர். முந்தைய நாள் நிருபர்கள் லைவ் டெலிகாஸ்டில் அசிங்கப் படுத்தியற்காக, டிவிட்டரில் இன்று ட்ரெண்டில் #OneMoreQuestionShabbir விட்டனர்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களிடம் அத்துமீறி கேள்விகள் கேட்ட டைம்ஸ் நவ் சபீர் அகமதுவுக்கு எதிராக டிவிட்டரில் ஒரு போராட்டம்!
பாகிஸ்தானில் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியது இந்திய முழுவதும் டிவிட்டர் ட்ரெண்ட் ஆன அதே வேளையில் – இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் இன்று #OneMoreQuestionShabbir எனும் ஹாஷ் டாக் டிரெண்ட் ஆனது.
மருத்துவர் அன்புமணி அவர்கள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது, மிகவும் மோசமாக நடந்துகொண்ட TimesNow தொலைக்காட்சியின் சபீர் அகமதுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் டிவிட்டரில் பல்லாயிரக்கணக்கான கேள்விகளை #OneMoreQuestionShabbir என்கிற தலைப்பில் டிவிட்டரில் கேட்டனர்.. என்று இன்று செய்திகள் பரவின!