அபிநந்தன் உடலில் உளவு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை – அபிநந்தனுக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உறுதியானது | விமானத்தில் இருந்து குதித்ததால் தண்டுவடத்தின் கீழ் பகுதியில் பாதிப்பு |
விங் கமாண்டர் அபிநந்தனுக்கு முதுகு தண்டுவடத்தின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது! மேலும், விங் கமாண்டர் அபிநந்தனின் உடலில் உளவு பார்க்கும் ரகசியக் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்று மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு, தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று, அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இன்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் ராவ் பாம்ரே சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, தனது குடும்பத்தினரையும் அபிநந்தன் சந்தித்துப் பேசினார். அவருக்கு அளிக்கப் பட்ட உளரீதியான சிகிச்சையின் போது, பாகிஸ்தான் ராணுவம் வசம் தான் இருந்த போது மன ரீதியாக கடுமையாக துன்புறுத்தப்பட்டேன் என்று அபிநந்தன் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்திய ஊடகங்கள் சில, பாகிஸ்தான் உளவுத்துறையினர் அபிநந்தனின் உடலில் உளவு பார்க்கும் கருவி ஏதேனும் பொருத்தி இருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் விவாதங்களைச் செய்தன. இந்நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் முடிவுகளின்படி, உடலில் உளவு பார்க்கும் கருவிகள் ஏதும் பொருத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டதாக செய்தி வெளியானது.
அப்போது, முதுகு தண்டுவடத்தின் கீழ்ப் பகுதியில் அபிநந்தனுக்கு காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் அபிநந்தன் கீழே குதித்த போது அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் அவரை தாக்கிய போது இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இதனிடையே விய்ம்பெல் R 73 ரக ஏவுகணையை பயன்படுத்தி, பாகிஸ்தானின் F16 விமானத்தை அபிநந்தன் வீழ்த்தியதாக தகவல் வெளியானது. R 73 ஏவுகணையை அவர் தாக்குதலுக்காகத் தேர்வு செய்த தகவல் தான், கடைசியாக மிக் 21 பைசன் விமானத்தில் இருந்து அவர் அனுப்பிய கடைசி ரேடியோ செய்தி. அதன் பின்னர், அவரது விமானம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் விழுந்தது. இதனால் அபிநந்தன் பாராசூட் மூலம் குதித்து, பாகிஸ்தான் படைகளிடம் சிக்கிக் கொண்டார்.