ஹிந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக.,? என்று, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
இந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுகவிற்கு ஓட்டுப் போடாதீர்கள் என குறுஞ்செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டப்பிரிவு செயலர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: திமுக எந்த மதத்தின் மீதும் வெறுப்பு உள்ள கட்சி இல்லை! கட்சியில் உள்ளவர்களில் 90% பேர் இந்துக்கள்! தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மதசார்பற்ற கூட்டணியை உருவாக்கி திமுக தேர்தல் பிரசாரத்தை துவக்கியது.
தமிழக மக்கள் பாஜக அரசை தூக்கி எறிய வேண்டியதை உணர்ந்தனர்! இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுக ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரச்சாரத்தை துவக்கி உள்ளனர்!
அதன் தொடர்ச்சியாக இந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுகவிற்கு வோட்டு அளிக்காதீர்கள் என மொத்தமாக மொபைல் போன்களுக்கு sms அனுப்பப்படுகிறது இதை அனுப்புபவரின் மொபைல் எண் தெரிவதில்லை. இது சட்ட விதிகளுக்கு முரணானது
இவ்வாறு sms அனுப்புவோர் மீதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது!
இந்து மத நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் திமுக., மற்றும் அதன் தாய்க் கழகமான திக.,வினர் எந்த அளவுக்கு கேலியும் கிண்டலும் செய்து, இந்துக்களின் வழிபாடு மற்றும் சடங்குகளைக் கேலி செய்திருக்கிறார்கள் என்று உலகம் அறியும்.
விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல், அதை கேலி செய்தும், விமர்சனம் செய்தும், விநாயகர் உருவத்தை கேலி செய்தும் திமுக., திக.,வினர் கருத்துகள் வெளியிட்டிருப்பதையும் உலகம் அறியும்.
திமுக., தலைவராக இருந்த கருணாநிதியும், திமுக., தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினும் எந்த வகையில் எல்லாம் இந்து மத நம்பிக்கையுள்ள ஆன்மிக பக்தர்களை இழிவு படுத்தியுள்ளனர் என்பதை அண்மைக் காலமாக இந்து மத சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்துக் கொண்டு தான் வருகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்துப் பண்டிகளைகளுக்கு திமுக., தரப்பில் வாழ்த்து சொன்னதில்லை! அதே நேரம் வேற்று மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும், அவர்களின் பண்டிகைகளில் கலந்து கொள்வதும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுமாக திமுக.,வினர் தான் செயல்பட்டுள்ளனர்.
திமுக.,வின் அதிகார பூர்வ டிவி., ஊடகங்களில் கூட, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் பெயர்களைச் சொன்னதில்லை; மாறாக, விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது வெறுப்பு கொண்டவர்கள் திமுக.,வினர் .
இவற்றை எல்லாம் கண்டு மனம் வெதும்பிப் போயுள்ள திமுக.,வில் உள்ள 90% இந்துக்களில் பாதிக்கும் மேற்பட்டோர், திமுக., தலைமையையும் கட்சியையும் காறித் துப்புவதும், உண்மையை உணர்ந்து கொண்டு தங்கள் வழிக்கு மனம் திரும்புவதுமாக இருக்கின்றனர். அவர்களை தங்கள் கட்சியிலேயே தொடர்ந்து இருக்கச் செய்து, தங்கள் குடும்பம் ஆட்சியில் தொடர்ந்து கொழுத்திட வகை செய்வதற்காக, இப்போது தேர்தல் நேரம் என்பதால், இந்துக்களின் ஓட்டுகள் பறிபோய் விடக் கூடாது என்ற பதைபதைப்பில் திமுக.,வின் தொல்லையான நெல்லையில் வந்து அழுது புலம்பி விட்டுச் சென்றிருக்கிறார்.
திமுக., இந்துக்களின் எதிரி அல்ல என்று கூறினாலும், கிறிஸ்துவ, இஸ்லாமிய மதவெறிக் குழுக்களின் ஆதரவைத் தேடிப் பெற்றதும், இஸ்லாமிய கிறிஸ்துவக் கட்சிகளின் மதவெறி நபர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு, ஹிந்து மதசார்பற்ற கூட்டணியை திமுக. ,அமைத்ததும், இந்துக்கள் மனத்தில் கடும் கோபத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஹிந்து மதசார்பற்ற கூட்டணியை அமைத்துள்ள திமுக.,வுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதற்கு, ஒவ்வொரு ஹிந்துவுக்கும் உரிமை இருக்கிறது. மோடிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பகிரங்கமாக தங்கள் லெட்டர் ஹெட்களில் எழுதியும் போஸ்டர் அடித்தும் ஒட்டியிருக்கும் இஸ்லாமிய மதவெறி அமைப்புகள், மௌல்விகள், கிறிஸ்துவ மதவெறி பாஸ்டர்கள், சர்ச்சுகளின் ஆதரவுக் கடிதங்களை பகிரங்கப் படுத்திக் கொண்டிருக்கும் திமுக., இந்து மக்கள் தங்களை மத ரீதியாக நசுக்கியும், கேலி செய்தும் வருகின்ற ஹிந்து மதசார்பற்ற கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதற்கு உரிமை உள்ளது.
ஆனால் அந்த உரிமையையும் கேள்விக்கு உள்ளாக்கி, கூடாது என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக., தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பது, பாசிஸ வெறி இல்லாமல் வேறு என்ன?!
எனவே ஹிந்து மதசார்பற்ற கூட்டணி அமைத்துள்ள பாசிஸ வெறி பிடித்த திமுக., இந்துக்கள் ஓட்டுக்காக இப்படி ஒரு புகார் கொடுப்பதற்கு சிறிதும் அருகதை அற்றது என்பதை மட்டும் நாம் இங்கே பதிவு செய்கிறோம்!
– செங்கோட்டை ஸ்ரீராம்