இலங்கையில் கிறிஸ்துவ சர்ச்சுகள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நாட்டின் சுற்றுலா துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை, நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதேசத்துக்கு சனிக்கிழமை நேற்று வந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து தாம் வருந்துவதாகக் கூறினார். ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட அசம்பாவிதங்கள் நாட்டின் உல்லாச சுற்றுலாத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று கவலை தெரிவித்தார் ரணில்.
நாட்டின் வளர்ச்சியில் சுற்றுலா பெரும் பங்களிக்கிறது எனவே, நாட்டின் மலையக பிரதேசங்களில் சுற்றுலா பயணியர் மனம் கவரும் வகையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதே தமது அடுத்த இலக்கு என்று கூறினார். கண்டியில் 10 ஆண்டு வளர்ச்சித் திட்டமாக ஜப்பான் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டம் நுவரெலியா மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும் என்றார் பிரதமர் ரணில்.
அந்த வகையில் பொகவந்தலாவ பிரதேசத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க அங்கே வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் படும்; ஹட்டன் நகரம் தற்போது வளர்ச்சி அடைந்து வருவதுபோல் நானுஓயா, நுவரெலியா, கித்துல்கல ஆகியவையும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே தம் நோக்கமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆசிய நாட்டில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ள மலையக பிரதேசங்களை உலக சுற்றுலா பயணிகள் விரும்பத் தக்க பிரதேசமாக மாற்ற,சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என்று கூறினார் பிரதமர் ரணில் விக்ரம சிங்க.