கொழும்பு: மீண்டும் சமூக வலைத்தளங்களை முடக்கியுள்ளது இலங்கை அரசு.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவிய சமூக பதற்றத்தை உருவாக்கும் தகவல்களால் இலங்கையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சமூகப் பதற்றத்தை தணிக்கும் வகையில் இலங்கையில் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை முடக்கியது இலங்கை அரசு.
இலங்கையில், கடந்த ஏப். 21 ஞாயிறு அன்று ஈஸ்டர் தினத்தைத் தேர்ந்தெடுத்து, கிறிஸ்துவர்களையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து, இலங்கையின் புகழ்பெற்ற சர்ச்சுகள், ஹோட்டல்களில் இஸ்லாமிய மத அடிப்படைவாத தற்கொலை பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில், 253 பேர் உயிரிழந்தனர்.
உலகமே அதிர்ச்சி அடைந்த இந்தத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் ஆகியவை பொறுப்பேற்ற நிலையில், இந்த இயக்கங்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர். தொடர்ந்து இலங்கை முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாத தொடர்பு உள்ளவர்கள் குறித்த விசாரணையும் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்து 20 நாட்கள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை நேற்று மீண்டும் சர்ச்சுகள் திறக்கப் பட்டு, பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இலங்கை மக்கள் மெள்ள மெள்ள அச்ச நிலையில் இருந்து மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் கலவரம் மூண்டது. சமூக வலைத்தளத்தில் வெளியான வெறுப்பை விதைக்கும் பதிவால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து திங்கள் கிழமை இன்று வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
இதனிடையே, வழக்கம் போல் பதற்ற நிலை காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கி வைக்க இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது!
முன்னதாக, தொடர் குண்டுவெடிப்பை அடுத்து சில நாட்கள் இலங்கை முழுவதும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், டெலிகிராம் என சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், சிலாபம் கலவரத்தை அடுத்து அந்தப் பகுதியில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.