சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் கோட்சே – என்று மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு நாடு முழுதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது கருத்தை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இப்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.
அவர் பள்ளப்பட்டியில், இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதியில் பேசிய போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். இந்நிலையில் கமலின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதை அடுத்து, கமல்ஹாசன் வீட்டின் முன்னர் இந்து அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தக் கூடும் என்று கருதப் படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.