
கால்வாயில் குளிக்க சென்ற மூவா் அடுத்தடுத்து மாயம் தீவிர தேடுதலில் தீயணைப்பு துறையினா்…!
வாளவாடி கால்வாயில் குளிக்கச் சென்ற மூவா் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம் உடலைகளை தேடும் பணியில் தீயணைப்பு துறையினா். தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
உடுமலையை அடுத்த வாளவாடியை சேர்ந்தவர் பகவதி (வயது 50). இவருடைய மகன் சிவனேஷ் என்ற நிர்மல்(23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.
சிவனேஷ் வார விடுமுறை நாட்களுக்கு தனது வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு வழக்கம்போல் வாளவாடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
மறுநாள்(12-ந்தேதி) நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வாளவாடிக்கு அருகில் உள்ள பி.ஏ.பி. பிரதான கால்வாய்க்கு குளிப்பதற்காக சென்றதாக தெரிகிறது. சிவனேஷ் நண்பர்களுடன் வாய்க்காலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
வாய்க்காலில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் மேலே வரமுடியவில்லை. இதையடுத்து உடன் சென்ற நண்பர்கள் சிவனேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவரது பெற்றோரும், உறவினர்களும் வாய்க்காலின் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதையடுத்து சிவனேஷின் தந்தை பகவதி தளி போலீசில் புகார் செய்தார்.
அதைத் தொடர்ந்து தளி போலீசார் வாய்க்காலில் மூழ்கி காணாமல் போன சிவனேஷை நேற்று முழுவதும் தீவிரமாக தேடினார்கள். ஆனால் சிவனேஷ் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் இன்று(செவ்வாய்க்கிழமை) காலையில் தேடும் பணி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ்(45). இவரது மனைவி இந்திராணி(38). இவர்களுக்கு அருண்குமார்(18) மற்றும் அரவிந்தன்(21) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சுபாஷ் பாப்பம்பட்டியில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அருண் குமார் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது தனியார் பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்துள்ளான்.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்லடத்தில் இருந்து பொங்கலூருக்கு அருண்குமார் வந்துள்ளார். அனைவரும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அருண்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரின் உள்ளே விழுந்துவிட்டான். நீச்சல் தெரியாததால் மேலே வர முடியாமல் தத்தளித்துள்ளான். அப்போது அருகில் இருந்தவர்கள் அருண் குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் தண்ணீரின் வேகத்தில் அருண்குமார் அடித்துச்செல்லப்பட்டான்.
உடன் வந்தவர்கள் அருண்குமாரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வாய்க்கால் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் மாலை வரை அருண்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினரும், அருணின் உறவினர்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேபோல் திருப்பூரை அடுத்த வீரபாண்டியை சேர்ந்த பிரகாஷ் (30). பனியன் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது 3 வயது மகன் சஞ்சயை ஆண்டிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் குளிக்க அழைத்துச்சென்றார்.
அப்போது இருவரும் தண்ணீரில் இறங்கி குளித்தபோது வாய்க்காலில் தண்ணீர் வேகமாக வந்ததால் சிறுவன் சஞ்சய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.
இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் சஞ்சயை தேடி வருகிறார்கள்.
ஒரே நாளில் குளிக்க சென்ற மூவா் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.



