கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி தியானம் செய்த குகை, இப்போது மேலும் பிரபலம் அடைந்துவிட்டது. அழகிய ரம்யமான சூழலில், ஒரு இரவு முழுக்க குகையில் தியானத்தில் இருந்தார் மோடி.
இது ஊடகங்களின் தயவால் இப்போது உலக அளவில் கொண்டுசெல்லப் பட்டுவிட்டது. இந்த குகையில் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது என்பது தகவல்.
யோகாவை உலக அளவில் கொண்டு சென்ற பிரதமர் மோடி, தற்போது தியானத்தை ஊக்குவிப்பதற்காக இந்த குகையில் சில மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளார். மோடியின் பரிந்துரைப்படி குகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம்!
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த கையோடு, தான் மிகவும் விரும்பும் இமய மலையில் உள்ள ஆன்மிக அதிர்வலைகள் கொண்ட ஜோதிர்லிங்கத் தலமான கேதார்நாத்துக்கு செல்ல முடிவு எடுத்தார் பிரதமர் மோடி.
அதன்படி தேர்தல் முடிந்த மறுநாளே கேதார்நாத் சென்ற மோடி, பஞ்ச பாண்டவர்கள் இறுதியாக வழிபாடு செய்த இடம் என்று நம்பப் படும் கேதார்நாத்தில் தாமும் வழிபாடு நடத்தினார். அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ள குகையில், காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார். சுமார் 17 மணி நேரம் அவர் தியானத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் கேதார்நாத்தில் இந்த குகைகள் அமைக்கப்பட்டுள்ளனவாம். இவை இயற்கையானது அல்ல; பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. இங்கே மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் உண்டு. உள்ளே சிறிய கழிவறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பிரதமர் மோடி தங்கி பிரபலப் படுத்தியுள்ள இந்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு ரூ.3,000 என இந்த குகைக்கு வாடகை இருந்துள்ளது. ஆனால் பயணிகள் வருகை குறைவால் குகைக்கு முன்பதிவு ஆகாமல் இருந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசித்து, குகையில் வசதிகளை மேம்படுத்தி, வாடகையை ரூ.990 ஆகக் குறைக்க
நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த குகையில் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுடன் மூன்று வேளை உணவு, இரண்டு நேரம் டீ வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தனியாக
தங்கியிருக்கும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க 24 மணி நேர ஏற்பாடு உள்ளது குறிப்பிடத் தக்கது.