பாரதப் பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற படம் உருவானது. இந்தப் படத்தை நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மே 11ம் தேதி திரைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
ஆனால், மோடியின் வாழ்க்கைப் படம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், அந்தப் படத்தால், பாஜக.,வுக்கு ஆதரவு அலை ஏற்படும் என்றும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து தில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இருப்பினும் இந்தப் படத்தில் தேர்தல் விதிமீறல்கள் இருப்பதாகக் கருதவில்லை என்று கூறி தடை விதிக்க மறுத்தது நீதிமன்றம். ஆனால் தேர்தல் ஆணையம் இந்தப் படத்துக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையமே இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இதனை தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா வேண்டாமா? என்பதை முடிவு செய்யலாம் என்று கூறியது.
இருப்பினும், தேர்தல் ஆணையம் படத்தைப் பார்த்து விட்டு, தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதை அடுத்து, தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, தேர்தல் முடியும்வரை படத்தை வெளியிட தடை விதித்தது.
இதை அடுத்து, இந்தப் படம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மறு நாளில் அதாவது நேற்று வெளியிட தீர்மானம் செய்யப் பட்டது. இதையடுத்து பல எதிர்ப்புகளை தாண்டி மோடி படம் நேற்று இந்தியா முழுவதும் திரைக்கு வந்தது. இந்தப் படத்தை ரசிகர்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர்.
இந்தப் படம் மந்தமாக தொடங்கியதாகவும், ஆனால் அடுத்து சூடு பிடித்ததாகவும், மதியம் ஓரளவுக்கு இருக்கைகள் நிரம்பின என்றும், மாலை நேரத்தில் அதிக கூட்டம் வந்ததாகவும் கூறியிருக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை இந்தப் படத்துக்கு 2.88 கோடி வசூல் ஆனது என்று டிவிட்டரில் தகவல்கள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.
மோடி மீண்டும் எழுச்சி கண்டிருப்பதால், இந்தப் படம் அந்த சூட்டோடு சூடாக ஓடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விவேக் ஓபராய் என்பதால் பார்க்கலாம், அல்லது இந்தப் படம் ஃப்ளாப் ஆகியிருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.