நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக., தனித்தே பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வென்று, ஆட்சி அமைக்கிறது. பாஜக., கூட்டணியோ 350 தொகுதிகளுக்கும் அதிகமாக வென்றுள்ளது.
அதே நேரம் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. ராகுல் தனது பிரசாரத்தின் போது ரபேல் விவகாரத்தை மையப்படுத்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக காவலாளியே திருடன் என்று மோடியைக் குற்றம் சொல்லி சாடினார்.
ஆனால், ராகுலின் இத்தகைய எதிர்மறை விமர்சனங்களை மக்கள் ஏற்கவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. வெறுமனே குற்றச்சாட்டை மட்டுமே முன்வைத்த ராகுல் காந்தியால், மோடிக்கு எதிராக எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிட முடியவில்லை. ரபேல் விவகாரத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது, ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை, தவறு நடந்திருப்பதாக நான் சந்தேகிக்கிறேன் என்று மட்டுமே ராகுலால் சொல்ல முடிந்தது.
மேலும், ராகுலின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத் தனமாக இருந்ததாக காங்கிரஸார் பலரும் இப்போது புலம்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கட்டிப் பிடித்தது, பின்னர் அடுத்து இருப்பரைப் பார்த்து கண்ணசைத்தது என்றெல்லாம் குழந்தைத் தனமான செயல்களைப் பார்த்து நாடே சிரித்தது!
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் இது குறித்து கூறும் போது, ராகுல் காந்தியின் “காவலாளி ஒரு திருடன்” என்ற நரேந்திர மோடி மீதான கருத்து எதிர்மறை வினையை எற்படுத்திவிட்டது. மோடியை திருடன் என்று சொன்னதை மக்கள் ஏற்கவில்லை!
மேலும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நிகழ்வுகளின் போது காங்கிரஸ் தலைமை அதனை சரியாகக் கையாளாமல், நாட்டின் ஒட்டுமொத்த மனநிலைக்கு எதிரான எதிர்த்திசையில் பயணித்தது. காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள், ராணுவத்தை விமர்சனம் செய்வதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பயங்கராதிகளுக்கு ஆதரவாகவும் மாறியது போன்ற மனநிலையில் மக்கள் இருந்தனர்.
பயங்கரவாத இயக்கத் தலைவன் மௌலானா மசூத் அசாரை, மசூத் அசார் ஜீ என்று மதிப்பும் மரியாதையும் மிக்கவராக ராகுல் வெளிப்படுத்தியதைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. இவற்றை இளம் தலைமுறையினர் வெறுப்புடன் பார்த்தனர்.
மேலும், குடும்ப அரசியலை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பவில்லை
என்றெல்லாம் தோல்விக்கான காரணங்களை அடுக்குகின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்!