நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில், கார்டிப்பில் நடந்த லீக் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன்
வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை பேட் செய்ய களம் இறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
ஹென்றி வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் திரிமான்னே (4) ஆட்டம் இழந்தார். 9வது ஓவரை வீசிய ஹென்றியின் முதல் பந்தில் குசல் பெரேரா (29) வெளியேறினார். அடுத்த பந்தில் குசல் மெண்டிஸ் டக் அவுட்டானார். தனஞ்செயா (4), மாத்யூஸ் (0) தொடர்ந்து சொதப்பினர். கேப்டன் கருணாரத்னே மட்டும் அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார்.
திசரா பெரேரா 27 ரன்னில் ஆட்டமிழக்க மற்றவர்களும் ஏமாற்ற, இலங்கை அணி 29.2 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கருணாரத்னே (52) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஹென்றி, பெர்குசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி ஒரு நாள் போட்டி போல் இல்லாமல், டி20 போட்டி போல் விளையாடியது. கப்டில், முன்ரோ ஜோடி சிறப்பான துவக்கம் தந்து
அரை சதம் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். நியூசிலாந்து அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.