தேவைப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெறுகின்ற வரை, நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்கப் போவதில்லை என்று கூறியுள்ளது காங்கிரஸ்.
இரண்டாவது முறையாக மோதி பிரதமர் பதவி ஏற்ற கையுடன் தனது அமைச்சரவை சகாக்களின் மூலம் தொய்வின்றி பணிகளைத் தொடங்கி விட்டார். அதே நேரம், தாங்கள் சந்தித்த படுதோல்விக்குப் பின்னர், காங்கிரஸ் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவராக பலரது பெயர்கள் அடிபட்ட போதும், இந்த முறை சோனியா காந்தியே தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில், போதிய உறுப்பினர் பலம் இல்லாததால், காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோராது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது
மக்களவையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 52 உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை ஒரு கட்சி பெற வேண்டுமானால், குறைந்த பட்சம் 54 உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அதற்கு 2 உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வதந்தி பரவியது.. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காங்கிரஸுடன் தனது கட்சியை இணைத்து, அந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரலாம் என்ற பேச்சு உலவியது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, எங்களிடம் 2 உறுப்பினர்கள் குறைவாக உள்ளதால் நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்கப் போவதில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கான 54 உறுப்பினர்களாக எங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ளும் வரை நாங்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை கேட்க மாட்டோம்.
இந்தப் பொறுப்பை நாங்கள் அரசுக்கே விட்டு விடுகிறோம். எதிர்க் கட்சித் தலைவரை நியமிப்பதா வேண்டாமா என்ற முடிவை அரசே எடுக்கட்டும் என்றார்.
இதனிடையே, மக்களவையில் பாஜக.,வினரை ஒப்வொரு நாளும் கேள்விகள் கேட்டு திணறடிக்கவும் எதிர்க்கவும் காங்கிரஸுக்கு 52 எம்பி.,க்கள் போது என்று கூறியுள்ளார் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவராக தேர்வு செய்தனர். அப்போது பேசிய ராகுல், நம்மிடம் உள்ள 52 எம்.பி.,க்களும் பாஜக.,வை எதிர்த்து ஒவ்வொரு இன்ச்சும் போராடுவார்கள் என நான் உறுதி அளிக்கிறேன். பாஜக.,வை ஒவ்வொரு நாளும் கேள்வி கேட்டுஎதிர்க்க நம்மிடம் உள்ள 52 எம்.பி.,க்கள் போதும் என்றார்.