தென்கிழக்கு அரபிக் கடலில் வாயு புயல் உருவாகியுள்ளது. வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்தப் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதியில் ஜூன் 13ந்தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் சற்று தாமதமாக கடந்த சனிக்கிழமை கேரளாவில் தொடங்கியது. இதனால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சீரான மழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால் பாபநாசம் அணை ஒரே நாளில் 11 அடி உயா்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு “வாயு” என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது. வாயு புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக வருகின்ற 13ம் தேதி அதிகபட்சமாக மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்!. இந்தப் புயல் நாளை மறுநாள் குஜராத் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயு புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காது!
வரும் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் குஜராத்தில் கன மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கப்பற்படை, கடலோர காவல்படைகள் உஷார் நிலையில் இருக்க குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.
புயல் காரணமாக, கடலில் அதிக சீற்றம் காணப்படும் என்றும் அந்த பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
புயலால் மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் இருந்து சென்னை வரும் 2 விமானங்கள் 2 மணிநேரம் காலதாமதமுடன் வந்து சேருகின்றன. இதனால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர். அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் உறவினர்களும் நீண்டநேரம் காத்திருக்கின்றனர்