ராம பிரானின் உருவச் சிற்பம், ஈராக்கில் உள்ள மலையில் வடிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிந்துச் சமவெளி நாகரீகம் – மெசபடோமிய நாகரீகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்தியக் குழு ஈராக் நாட்டில் பயணம் மேற்கொண்டது. அப்போது ஈராக்கில் உள்ள தர்பந்த் ஐ பெலுலா என்ற மலையில் கையில் வில் ஏந்தி, இடுப்பில் சிறிய வாளைச் செருகிக் கொண்டு, மேலாடை அணியாத அரசன் நிற்பது போன்றும், அவரை ஒருவர் குனிந்து வணங்குவது போன்றும் சிற்பம் வடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தச் சிற்பங்கள், ராமர் மற்றும் அனுமனின் வடிவங்கள் என்று கூறுகின்றது அந்தக் குழு.
வணங்கும் நிலையில் உள்ள சிற்பம், அனுமானாகவும், வில் ஏந்தி நிற்கும் சிற்பம் ராமபிரானைக் குறிப்பதாகவும் அந்தக் குழு கூறுகிறது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை ஆய்வு நடத்தக் கோரியுள்ளது.
கிமு 2000 ஆவது ஆண்டு காலத்தியதாக இந்தச் சிற்பம் கணிக்கப் பட்டுள்ளது. இது பழங்குடியினத் தலைவனையும், அவனால் சிறைபடுத்தப்பட்ட எதிரியையும் குறிப்பதாக ஈராக் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அதன் மாதிரியை எடுத்து வந்து அயோத்தியில் ராமர் கோவிலில் வைக்க வேண்டும் என்று, உத்தரப் பிரதேச அரசுக்கு இந்தக் குழு கோரிக்கை வைத்துள்ளது.