ஆப்கானிஸ்தானின் காபூலில் திங்கள்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அலுவலகம், கால்பந்து மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் அமைந்துள்ள, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடைபெற்றுள்ளதை ஆப்கான் அமைச்சக செய்தித்தொடர்பாளர்கள் வஹிதுல்லா மாயார் மற்றும் நஸ்ரத் ரஹிமி ஆகியோர் உறுதிபடுத்தினர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும் இது தலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளின் கூட்டுச் சதியாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்நாட்டு அரசு இதுவரை வெளியிடவில்லை.
முன்னதாக, காந்தஹார் மாகாணத்தில் அரசுக் கட்டடம் ஒன்றை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அதில் 11 பேர் காவல்துறையினர், 8 பேர் தேர்தல் பணியாளர்கள். தாக்குதல் நிகழ்த்திய தலிபான்கள் மீது, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய பதிலடித் தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, தலிபான்களுடன் அமெரிக்கா 7-ஆவது கட்டப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.