இன்னும் சில சரித்திர உண்மைகள்-1 (காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன்களுக்கு சமர்ப்பணம்)
மகாத்மாவின் எளிமை:
கல்யாணம். செயலாளராகக் காந்தியிடம் பணியாற்றியவர். குமரி எஸ், நீலகண்டன் அவரைப் பலமுறை சந்தித்து உரையாடி உருவாக்கிய புதினம் ஆக்ஸ்ட் 15. அதில் திரு கல்யாணம் தன் வலைப்பதிவில் எழுதியதாகக் கூறப்படுவதிலிருந்து…..
//அவர் எப்போதுமே (ரயிலில்) மூன்றாம் வகுப்பு டிக்கெட் எடுத்தே பயணம் செய்வார். அரசாங்கமும் அவர் பயணம் செய்யும் முழுப் பெட்டியையும் அவர் பயன்பாட்டிற்கே கொடுத்துவிடும். அதில் அவரோடு பணியாற்றும் மூன்று நான்கு பேர் மட்டுமே இருப்போம்….
அப்போது ரயிலில் மூன்றாம் வகுப்பு பயணத்தில் இருக்கைகளில் சிறிய மரத்துண்டுகள் இணைக்கப்பட்ட இருக்கைகளே இருக்கும். மரத்துண்டுகளிடையே இடைவெளிகள் இருக்கும். அந்த இருக்கைகளில்தான் படுக்க வேண்டும். மெத்தைகள் எல்லாம் இருக்காது. காற்றாடியும் கிடையாது.. காந்தியின் உடம்பு வலிக்கக் கூடாதென்பதற்காக நாங்களே அந்தப் பெட்டியில் மெத்தை கொண்டு செல்வோம். ஒரு தலையணையும் வைத்திருப்போம்
அவருக்காக வெந்நீர் வைப்பதற்கு சிறிய ஸ்டவ்வும் வைத்திருப்போம்
காந்திக்கு மிகவும் வேண்டிய ஒரு தொழிலதிபர் இருந்தார். அவருடைய பெயர் மிருதுளா சாராபாய். அவர் அகமதாபாத்தில் உள்ள காலிகோ மில்லின் உரிமையாளர் சர் அம்பாலா சாராபாயின் மகள். விக்ரம் சாராபாயின் சகோதரி. மிருதுளா பாட்னாவில் வேலை செய்து கொண்டிருந்தார்
காந்தி பாட்னாவில் இருந்து திரும்பி வரும்போது அவர் வெப்பத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காகக் காந்தியின் பெட்டியின் சன்னலளவிற்கு பெரிய ஐஸ்கட்டிகளை சன்னல் பாதையில் மிருதுளா கட்டி வைத்து விடுவார். அதற்கு காந்தி ஒன்றும் சொல்ல மாட்டார். ஆனால் அந்த ஐஸ்கட்டிகள் உருகி ரயில் பெட்டியில் ஒழுகிக் கொண்டே இருக்கும் எங்கும் தண்ணீராய் இருப்பதால் எங்களுக்கு அது கொஞ்சம் அது சிரமமாகவே இருக்கும்//
- மாலன், பத்திரிகையாளர்