சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை 1,000 ரூபாயாக மாற்றி அமைக்க பாரத ஸ்டேட் வங்கி – எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கணக்கில் குறைந்த பட்ச இருப்புத்தொகை அளவை மாற்றி அமைத்தது. அதன்படி, பெரு நகரங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.5 ஆயிரம் எனவும், புறநகர்ப் பகுதிகளில் ரூ.3 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப் பட்டது.
சேமிப்புக்கணக்கில் குறைந்த பட்ச இருப்புத்தொகை இல்லையெனில், மெட்ரோ, புறநகர் பகுதி வாடிக்கையாளர்கள் ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் ரூ.20 முதல் ரூ.40 வரையிலும் அபராதமாக செலுத்த வேண்டும்.
வங்கியின் இந்த முடிவுக்கு வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த செப்டம்பர் மாதம் பெரு நகரங்களில் ரூ.5 ஆயிரம் ஆக இருந்த குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.3 ஆயிரமாகவும், புறநகர்ப் பகுதிகளில் இருந்த ரூ. 2 ஆயிரம், கிராமப்புற பகுதிகளில் ரூ.1,000 என மீண்டும் மாற்றியமைத்தது.
இதனால் மீண்டும் சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத்தொகையைக் குறைக்க எஸ்பிஐ வங்கி முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் குறைந்தபட்ச இருப்புத் தொகை, ரூ. 1,000 இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வங்கி வந்துள்ளதாம்.
அண்மையில் வெளியான ஒரு தகவலில், 2017ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை எனக் கூறி எஸ்பிஐ வங்கி, 1,771 கோடி ரூபாயை தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து அபராதமாக வசூல் செய்துள்ளது எஸ்பிஐ.,
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில், எஸ்பிஐ வங்கி பெற்ற வருவாய் 1,581.55 கோடி ரூபாய் எனவும், அதை விட அபராதத் தொகை அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.