வங்கிக் கணக்கில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் என்ற அறிவிப்பைச் செய்து, வாடிக்கையாளர்களை வயிறு கலங்கச் செய்துள்ளது கனரா வங்கி!
நேரடி பணப் பரிவர்த்தனையை குறைக்க இந்த நடவடிக்கையை வங்கி நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்பட்டாலும், இதனால் பாதிக்கப் படப் போவது வர்த்தகர்களும் வாடிக்கையாளர்களும்தான் என்று கூறுகின்றனர்.
பொதுத்துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி மாதத்திற்கு 3 முறை மட்டுமே இலவசமாக வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து அதிகமுறை பணம் எடுத்தால் கட்டணம் வசூலித்த நிலையில், தற்போது பணம் போடுவதற்கும் கட்டணம் வசூலிக்கும் நிலை வந்துவிட்டது.
குறிப்பாக ஏடிஎம்.,களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப் படும் என்று மற்ற வங்கிகள் செயல்படுத்தி வந்த நிலையில், இப்போது 3 முறைக்கு மேல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப் படும் என்ற அறிவிப்பு, பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஜூலை 1-ம் தேதி முதல் மாதத்திற்கு 3 முறை மட்டுமே வங்கி கணக்கில் 50,000 ரூபாய் வரையில் இலவசமாக பணமாக டெபாசிட் செய்ய முடியும்.
அதன் பிறகு டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 1 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் இந்த சேவை கட்டணமானது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை இருக்கும் என்றும், அதனுடன் ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் கனரா வங்கி தெரிவித்துள்ளது.