நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நயன்தாரா நடித்து வெளிவரத் தயாராகவுள்ள படம் “கொலையுதிர் காலம்”. கமலின் உன்னைபோல் ஒருவன், அஜித்தின் பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோல்டி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 14-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டது.
இந்நிலையில் “கொலையுதிர் காலம்” என்ற தலைப்பு என்னுடையது எனக் கூறி இயக்குநர் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், இந்தத் தலைப்பை தாம் ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கி உரிமை பெற்றுள்ளதால் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொலையுதிர் காலம் என்ற பெயரில் நயன்தாரா நடித்துள்ள படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் படத் தயாரிப்பு நிறுவனம் வரும் ஜூன் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.