கடந்த இரு நாட்களாக கோவையில் தேசிய பாதுகாப்பு முகமையின் அதிகாரிகள் சோதனைகள், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக என்.ஐ.ஏ., அதிகாரிகள், கொச்சினில் இருந்து வந்து, கோவையில் விசாரித்து வருகின்றனர். அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் நிகழ்ந்த தற்கொலை குண்டு வெடிப்பு தொடர்பில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தமிழகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில் கேரளம், தமிழகத்தில் சிலரது தொடர்புகளைக் கண்டறிந்தனர்.
தற்போது என்.ஐ.ஏ., தலைமை அலுவலகம் தில்லியில் செயல்படுகிறது. அதோடு கிளை அலுவலகங்கள் ஜம்மு, உ.பி., மாநிலம் லக்னௌ, அஸாம் மாநிலம் கௌஹாத்தி, மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தா, ம.பி., ராய்ப்பூர், ஆந்திர பிரதேசம் / தெலங்கானாவில் ஹைதரபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை, கேரள மாநிலம் கொச்சின் ஆகிய இடங்களில் உள்ளன.
முக்கியமாக, கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் பயங்கரவாத ஊடுருவல்கள், சாதாரண மக்களோடு மக்களாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அண்மைக் கால போராட்டங்கள், தமிழ், தமிழர் எனும் பெயரால் மேற்கொள்ளப் படும் அனைத்துப் போராட்டங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தொடர்பும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் தொடர்பும் இருப்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆடிய ஆட்டமும், அதன் பின்னர் அவர் தங்கள் சார்பு சமூக வலைத்தளங்களில் செயல்படுபவர்களுக்கு இடும் கட்டளையாக, தமிழ், தமிழர்க்காக குரல் கொடுக்கும் தமிமுன் அன்சாரி என்றும், எங்கேயும் மார்க்கம் என்ற சொல் வந்துவிடக்கூடாது என்று கட்டளையிடும் குரல் பதிவும் மிகவும் வைரலான ஒன்று.
மேலும், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் தென்மாவட்ட கலவரங்களில் கிறிஸ்துவ சர்ச்சுகள், மிஷனரிகளின் நேரடியான களமிறங்கல் வெளிப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழகம் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருப்பதாலும், மக்களோடு மக்களாக ஊடுருவி அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களைச் செய்ய தூண்டுவிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதால், தமிழகத்தில் சென்னையிலோ, திருச்சியிலோ என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் அமைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.