விஜயதசமீ நாளான இன்று இந்திய விமானப் படை தனது 87வது ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறது.
இந்த நாளில், இன்னொரு சிறப்பம்சமாக இந்திய விமானப் படைக்கு, மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் சேர்வதற்கான பிள்ளையார் சுழியாக, முதல் விமானத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சஸ்த்ர பூஜையை, அதாவது ஆயுத பூஜையை நடத்துகிறார்.
இந்திய விமானப் படைக்கு ரபேல் ரக விமானங்களை வாங்க ஐரோப்பிய நாடான பிரான்சின் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்களை ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் ரஃபேல் ரக போர் விமானம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லி விமான நிலையத்தில் இருந்து திங்கள் நேற்று பாரிஸ் சென்றடைந்தார். பாரீஸில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.
நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையான சஸ்த்ர பூஜை கொண்டாடப் படும் நாளில், ரஃபேல் விமானத்துக்கும் சஸ்த்ர பூஜை நடத்தி ராணுவத்தில் சேர்க்க ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த தினத்தில் இந்திய விமானப் படை தனது 87வது தினத்தைக் கொண்டாடுவதை ஒட்டியும், இந்த நடவடிக்கையில் ராஜ்நாத் சிங் இறங்கியுள்ளார்.