தற்காலிக ஆசிரியர்களைத் தடுத்தால், அவர்கள் குறித்து போலீஸில் புகார் அளிக்கப் பட்டு, நடவடிக்கை எடுக்கப் படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களையும், பணிக்கு வரும் நிரந்தர ஆசிரியர்களையும் தடுத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஜாக்டோ – ஜியோ’ அமைப்பினர் கடந்த ஜன. 22ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் கல்விப் பணிகள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளன. எனவே மாதம் ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் உத்தரவிட்டது.
இதை அடுத்து, தற்காலிக ஆசிரியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாக புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில் இத்தகைய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து, எச்சரிக்கை அனுப்பியுள்ளார்.