ரஜினி பற்றிப் பேசுவதை சீமான் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீமான் துவக்கத்தில் சினிமாவில் இயக்குனராக இருந்தார். அதனால் தான் இயக்கும் படங்களில் உள்ள கதையை நடிகர்களுக்குக் கூறும்போது, அப்படியே நடித்துக் காட்டுவார். ஆனால் அந்த நடிப்பு சரியாக வராததால், இயக்குவதிலேயே நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இப்போது அதில் தேறிவிட்டதால், கதை சொல்ல ஆள் இன்றி, தான் இயக்கப் போகும் கதைகளின் கருவை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு சினிமாக் கதையாக மேடை போட்டு தன் ரசிக விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு சொல்லி வருவதுடன் நடித்தும் காட்டி வருகிறார். அவரது மேடை நடிப்பில் காமெடி, குரோதம், கோபம், வீரம், ஸ்டண்ட், அரசியல் என எல்லாம் கலந்திருக்கும். இதனால் காசு கொடுத்து சினிமா பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, பலரும் இவரது கூட்டங்களுக்கு வந்து, இவர் சொல்லும் கதைகளைக் கேட்டே சினிமா பார்த்த உணர்வைப் பெற்று விசில் அடித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், தனது கதைகளை சூப்பர் ஸ்டாருக்குச் சொல்ல முடியாமல், ரஜினியை இயக்க இயலாமல் இலவு காத்த கிளியைப் போன்று இருந்த சீமானுக்கு நேற்று முளைத்த காளான்களின் இயக்கத்தில் எல்லாம் ரஜினி நடிப்பது மேலும் மேலும் ஏமாற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனால் இப்போது ரஜினி குறித்து தினந்தோறும் ஒரு கதையைச் சொல்லி விசிலடிச்சான் குஞ்சு ரசிகர்களை திருப்திப் படுத்தி வருகிறார். இதற்கு ரஜினி ரசிகர்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அகவன்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தீவிர ரஜினி ரசிகர்! எனவே அரங்கம் முழுக்க ரஜினி ரசிகர்களாகவே நிறைந்திருந்தனர். இந்த விழாவில் ரஜினியின் பிரதான ரசிகர்களான ராகவா லாரன்ஸ், சின்னி ஜெயந்த், காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன், லொள்ளு சபா ஜீவா என பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த விழாவில் பேசிய கராத்தே தியாகரான, பாக்யராஜின் ‘தாவணிக் கனவுகள்’ படத்துக்கு ஸ்டன்ட் வடிவமைத்த குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். தமிழகத்துல சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. சினிமாவுல இருந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று பலர் வந்தாங்க. அதுபோல, அண்ணன் ரஜினிக்கும் வாய்ப்பு இருக்கு. அதுக்கு சினிமா உலகத்தினர் ஆதரவு கொடுக்கணும். இன்னும் நிறையப் பேர் போட்டியில் இருக்காங்க. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி இருக்கும். விழாக்களில் அரசியல் பேசக்கூடாது. ஆனாலும் சீமான் போன்றவர்கள் அண்ணன் ரஜினியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என எச்சரித்தார்.