திமுக., கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்டதும், அங்கே யார் போட்டியிடுவார் என்று ஒரு கேள்வி எழுந்தது. தொகுதியில் நன்கு அறிமுகமான சுதர்ஸன நாச்சியப்பன் களத்தில் இருக்க, காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோரும் அதைக் கேட்க… முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமோ அதைத் தன் மகனுக்குக் கேட்டார்.
ஏற்கெனவே தோல்வியின் விளிம்புக்குச் சென்று, பின்னர் ரீகவுண்டிங்கில் வெற்றி பெற்று வந்த ப.சிதம்பரம், கடந்த முறை தனது மகன் கார்த்தி அந்தத் தொகுதியில் நின்று தோற்ற போதும், இந்த முறை திமுக., கூட்டணி தயவால் மகன் வென்று விடுவார் என்று உறுதியாக நம்பி தொகுதியைக் கேட்டு அடம்பித்தார்.
ஆனால் கார்த்தி மீதுள்ள வழக்குகள், எதிர்ப்புகள் இவற்றைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் மேலிடம், மறுத்துள்ளது. ஆனால், தனது மகனுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால், தாம் கட்சியில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டி, காரியத்தை சாதித்துக் கொண்டுள்ளார் ப.சிதம்பரம்.
இந்தப் பிரச்னைகளால் அல்லாடிக் கொண்டிருந்த போது, ராகுல் காந்தி அமேதியை அடுத்து தென்னிந்தியாவில் இரண்டாவது தொகுதியாக சிவகங்கையில் நிற்கலாம் என்று பரிசீலனை செய்துள்ளார். காரணம், அடிதடியை தவிர்க்க வேண்டும் என்றால், தாம் அங்கே நிற்பதுதான் சரி என்று அவர் கருதியுள்ளார்.
இருப்பினும் கடைசியில் சிதம்பரத்தின் பிடிவாதமே வென்றது. இவ்வாறு சிவகங்கையில் ராகுல் போட்டியிட விரும்பினார் என்ற தகவலையும் ப.சிதம்பரமே வெளியில் இப்போது கூறியுள்ளார்.
சிவகங்கை தொகுதியில் ஏற்பட்ட வேட்பாளர் சர்ச்சை குறித்து நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பதிலில், ”அதில் சர்ச்சை எதுவும் இல்லை. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான 24 மணி நேரத்தில் சிவகங்கை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. ஏனெனில் வயநாடு, சிவகங்கை, கர்நாடகாவில் ஒரு தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக இருந்தார். அதனால்தான் இந்தத் தாமதம்” என்று கூறியிருந்தார்.