சென்னை மத்திய ரயில் நிலையம் இனி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று அறிவிக்கப் படும் என்று அறிவிக்கப் பட்ட படி, தற்போது அரசு நோட்டிபிகேஷன் -அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.
அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் பாராட்டும் பலரும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்வது சரியாக இருக்காது. இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் சில உள்ளூர் ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அத்தகைய போக்கு இதுவரை இருந்ததில்லை. காரணம் ரயில்வே நிலையங்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவை.
ஆனால் தமிழகத்தில், ஊருக்கு ஊர் இருக்கும் பேருந்து நிலையங்கள், நகர்கள் எல்லாம் திராவிட இயக்கத் தலைவர்களின் பெயர்களைத் தாங்கி, பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. இவர்களை விட்டால் தமிழகத்தில் வேறு தலைவர்களே இல்லை என்று கூறும் வகையில் தமிழகத்தில் எல்லாமே இந்த மூன்று நான்கு பெயர்களுடன் தான் இருக்கின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரயில்வே துறையில், தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, மாநிலத்தை ஆளும் அதிமுக., தற்போது எம்.ஜி.ஆர்., பெயர் மாற்றத்தை செய்திருக்கிறது.
இது போல், வருங்காலத்தில் கருணாநிதியின் பெயரை எழும்பூர்க்கு வைக்க வேண்டும் என்று திமுக., நாளை கோரிக்கை வைப்பார்கள். அடுத்து ஜாதி கட்சித் தலைவர் அவர் ஜாதியை சார்ந்தவர் பெயரை ஓர் ரயில் நிலையத்துக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.
தமிழகத்தில் இவ்வாறு தலைவர்களின் பெயர்கள் வைப்பதால் பிரச்சனைகள் வரும் என்றுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு தலைவர்களின் பெயரையும் அனைத்து போக்குவரத்து கழகங்கள், மாவட்டத்தின் பெயர்களை தமிழக அரசு நீக்கியது. ஆகவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்யும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.
இது மட்டுமில்லாமல் நெடுந்தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப் படுவதால் தாம்பரம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை தாம்பரம் என்றும், திரிசூலம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை விமானநிலையம் என்றும் பெரம்பூர் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை பெரம்பூர் என்றும் மாற்றம் செய்ய வேண்டும்… என்றும் கோரிக்கை வைக்கிறார்கள் ரயில் பயணியர் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.