
சுனாமி நினைவுகள் …
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
(ஆசிரியர் – கலைமகள், மஞ்சரி)
சுனாமி என்பது ஜப்பானியச் சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை சுனாமி என்பது துறைமுக அலை என பொருள்படும்.
துறைமுகங்களில் ஏற்படும் அலையல்ல சுனாமி என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழில் இதனை ஆழிப்பேரலை என்று சொல்கின்றனர். இந்தோனேஷியாவில் சும்மாங் என்று அழைக்கின்றனர்.
ஆழிப்பேரலைப் பற்றி பண்டைய தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. நில அதிர்வின் விளைவால் கடலில் எல்லை மாறுபடுவதை “நிலம்புடை பெயரினும் நீர்த்தீப் பிறழினும் இலங் குதிரைப் பெருங்கடற்எல்லை தோன்றிலும்–“என்று குறுந்தொகை 373 ஆவது பாடலில் சொல்லப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலையில் பண்டையத் தமிழகம் உருக்குலைந்ததை இறையனார் அகப்பொருள் உரை மற்றும் அடியார்க்குநல்லான் உரை ஆகியவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
“பெரு நிலங்கிளறினும்” என்ற நற்றிணைப் பாடல் மூலமாகவும், “நிலத்திறம் பெயருங் காலை யாயினும்” என்ற பதிற்றுப்பத்து பாடல் மூலமாகவும், “நிலம் புடை பெயர்வதாயினும்” என்ற புறநானூற்றுப் பாடல் மூலமாகவும் ஆழிப்பேரலையைப் பற்றித் தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது!
கிரேக்க வரலாற்று ஆசிரியர் (கிமு 426)தியுசிடைட்ஸ் சுனாமி ஏற்படுவதற்கான காரணத்தை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற தனது புத்தகத்தில் முதன்முதலாக கூறியுள்ளார் என்று மேலை நாட்டவர் சொல்வார்கள்.
ஆனால் தமிழகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சுனாமியின் தாக்கத்தை அதாவது ஆழிப்பேரலையின் தாக்கத்தை உணர்ந்துள்ளது என்று நம் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லி உள்ளார்கள்.
முதல் தமிழ்ச் சங்கம் சிவபெருமான் தலைமையில் நடந்ததாக நாம் நம்புகிறோம். முதல் தமிழ்ச் சங்க கால தென்மதுரையை கடல் கொண்டது. அதேபோல் இடைச்சங்க காலத்தில் கபாடபுரத்தை கடல் விழுங்கியது.

புகார் நகருக்கு அப்பால் 400 யோஜனை தூரம் நிலப்பரப்பில் இருந்த நாடு நாகநாடு. புகார் நகரில் இருந்து நாகநாடு செல்லும் வழியில் மணிபல்லவம் என்னும் தீவு இருந்தது. இந்த மணிபல்லவம் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச்சென்று காப்பாற்றியதாக கூறுவார்கள்.
நாக நாட்டை வளைவணன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். மணிமேகலை தெய்வம் சாபமிட்டதால் புகார் நகரமும் நாக நாடும் நகரும் கடற்கோளுக்கு இறை ஆயின. இவ்வாறு ஆழிப்பேரலை தமிழ் நிலப் பரப்புகளைக் கடல் கொண்டதாகத் தமிழ் மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குமரிக்கண்டம் என்னும் லெமூரியாக் கண்டம் கடலுக்குள் மறைந்து போனதாக சீனிவாச ஐயர், சேசை ஐயர், ராமச்சந்திர தீட்சதர், தேவநே