விநாயகர் நான்மணிமாலை – பகுதி 20
அறிவியல் இப்போது வெகுவாக வளர்ந்துவிட்டது. வேளாண்மையில் ஒரு காலத்தில் ஆறு மாதம் வரை வளர்ந்து பயன் தந்த நெல், கடலை முதலிய உணவுப் பயிர்கள் இருந்தன. ஆனால் இன்றோ 100 நாளில் விளைகின்ற இரகங்கள் உள்ளன. தானாக உருவான காடுகள் மறைந்து நாம் காடுகளை உருவாக்க மரங்கள் நடுகிறோம். ஆனால் விதைத்தவுடன் முளைக்கின்ற தாவரங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நமது சித்தர்கள் அதனைச் செய்திருக்கிறார்கள். சுமார் 5100 ஆண்டுகளுக்கு முன்னர் இதனைச் செய்திருக்கிறார்கள். அவ்வாறு விதைத்தவுடன் பயிர் முளைக்க ‘விதைநேர்த்தி’ செய்யவேண்டும். விதைநேர்த்தி என்பது இன்றைய அறிவியல் கண்டுபிடித்ததல்ல. சித்தர்கள் சொன்னது. இதனைச் சொல்லுகின்ற ஒரு பாடல் உள்ளது. இப்பாடல் போகரின் குருவான காலாங்கி நாதர் சொல்ல பொகர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.
பண்பான வித்தையது சாற்றக்கேளு
பாரினிலே மாணாக்கன் பிழைக்கவன்று
கண்பான ஈசலது மரக்காலாகும்
கருவான புத்தீசல் தானெடுத்து
நண்பான பானைக்குள் சில்லுபோட்டு
நலமுடனே குழித்தைல மிறக்கிக் கொண்டு
திண்பான தயில மதில் கீரை வித்தை
தெறிவுடனே முட்டைக்குள் வூறப்போட
போட்டுமே மண்டலந்தான் சென்றபோது
பெருமையுடன் றானெடுத்து மைந்தாபாரு
வாட்டமுடன் சீஷவர்க்க மிகவழைத்து
வாகுடனே போசன்ங்களு ண்பதற்கும்
கூட்டமுடன் சித்தர்முனி நாதர் கூட்டம்
குறிப்புடனே யாயிரம்பேர் சூழ்ந்திருக்க
வாட்டமுடன் மணலதனைக் கொட்டிமைந்தா
பட்சமுடன் விரை தனையே தெளித்திடாயே
தெளித்தவுடன் சலமதனை விட்டு மைந்தா
தேற்றமுடன் இருசாப் பொழுதில் தானும்
நெளிந்துமே விரையெல்லாம் முளை கிளம்பி
நேர்புடனே சிறுகொடியா மங்குலந்தான்
களிப்புடனே சித்தர் முனிரிஷிகளிக்கு
கண்கொள்ளாக் காட்சியுடன் கருவுமாகும்
துளிப்புடைய கீரை வித்தை சொல்லார்தான்
சுந்தரனே போகரிஷி சொல்லிவிட்டேனே
(காண்டம் 3, பாடல்கள் 330, 331, 332)
மேலே குறிப்பிட்ட பாடலின்படி விதைநேர்த்தி செய்து கீரையை விதைத்தால் ஆயிரம் முனிரிஷிகள் உண்ண உணவாகும் எனப் பாடல் கூறுகிறது.
இப்படிப்பட்ட விதை முளைக்கும் தன்மை அறிந்து, அதைப் போல தொழிலாற்ற வேண்டும் என்று சொல்லியுள்ள பாரதியாரை ஒரு சித்தர் எனச் சொல்வதில் தவறேதும் இல்லை.