32. ஹிந்துக்களின் யோக வித்யை!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“இமம் யவம் அஷ்டாயோகை: ஷட்யோகேபி: அசர்க்ருஷு:” – அதர்வண வேதம்.
“அஷ்ட யோகங்களாலும் ஆறு யோகங்களாலும் இந்த ‘யவ’ தானியத்தை உழைத்து தயாரித்தனர்”.
“அஷ்டாங்க, ஷடாங்க யோக முறைகள் சித்தத்தில் உள்ள மலினங்களை நீக்கி உள்ளத் தூய்மைமை அருளுபவை. தோல் நீக்கிய ‘யவ’ தானியத்தைப் போல, மாயை என்னும் அஞ்ஞானம் நீங்கி ஜீவன் நிர்மலமடைவான்” என்று மேற்சொன்ன வேதவாக்கியம் விளக்குகிறது
தற்போது உலகில் அனைத்து நாடுகளிலும் ‘யோகா’என்ற பெயரில் நம்முடைய யோக வித்யையில் உள்ள ஆசனம், பிராணாயாமம் போன்ற வித்யைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த யோகத்தின் பலனை அனுபவத்தில் பெறுபவர்கள் சிறிது சிறிதாக இதனை பரவச் செய்து வருகின்றனர். யோகா மையங்கள் உலகெங்கும் திறக்கப்படுகின்றன.
இந்தப் பின்னணியில், “இது உலகளாவியது. ஹிந்துக்களூடையது மட்டுமே அல்ல” என்று சில மதவாதிகள் விவாதித்து வருகிறார்கள். “ஆமாம் போலும்!” என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர் நம்மவர்களும்.
ஆனால் யோக வித்யை ஹிந்து தர்மத்தின் உண்மையான வடிவம். அது எட்டு அங்கங்களோடு கூடியது. யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பது யோகத்தின் எட்டு அங்கங்கள். இவற்றில் யமம், நியமம் என்பவை பாரதிய ஹைந்தவ வாழ்க்கை வழிமுறை.
கடவுளை தியானிப்பதற்கு ஓங்காரத்தை பதஞ்சலி யோக சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஓங்காரமும் எட்டு யோக அங்கங்களும் வேதத்தை மூலமாகக் கொண்டவை. வேதங்களில் பல இடங்களில் (உபநிஷத்துக்களிலும் கர்ம கண்டங்களிலும்) யோகத்தின் எட்டு அங்கங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பதஞ்சலி அவற்றையே யோக சூத்திரங்களாக எழுதினார்.
பகவத்கீதையில் யோகம் என்ற பெயரிலேயே அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆறாவது அத்தியாயம் முழுவதும் பதஞ்சலி யோக தரிசனத்தையே விவரிக்கிறது. பக்திக்கும், ஞானத்திற்கும் யோகம் பிரதானமான துணை என்று கூறுகிறது. இதே கருத்தை பாகவதம் ஸ்பஷ்டமாகவும் விஸ்தாாரமாகவும் போதிக்கிறது.
இந்த அஷ்டாங்க யோகத்தோடு கூட ஆறு யோகங்கள் பற்றிக் கூறுகிறது வேதம். இவை மூலாதாரம் முதல் ஆக்ஞா சக்கரம் வரை செய்யும் குண்டலினி சாதனை. இவற்றையும் நம் புராண, இதிகாசங்கள் குறிப்பிட்டுள்ளன.
பதஞ்சலி யோகம், ஹடயோகம், மந்திர யோகம் போன்றவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. இவற்றால் உலக அறிஞர்கள் ஈர்க்கப்பட்டு சாதனையில் ஈடுபட்டுள்ளனர். நற்பலன்களை பெற்று வருகின்றனர்.
வேதங்களை ஆதாரமாகக் கொண்ட பாரதிய சனாதன தர்மம் யோகத்தை முக்கியமாக கருதியது. வெவ்வேறு தெய்வ உபாசனைகளை மட்டுமே கொண்டது ஹிந்து தர்மம் என்று நினைக்கிறோம். ஆனால் கடவுள் வழிபாடு என்பது இந்து மதத்தின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் இவற்றுக்கு கூட உலகளாவிய பார்வை உள்ளது. தற்போதைய யோகாவைப் போன்றே அவையும் விரைவில் உலகெங்கும் பரவும். தற்போதே அதிக அளவில் அயல் நாட்டு அறிஞர்கள் இவற்றை அங்கீகரித்து கடைபிடித்து வருகின்றனர்.
கடவுள் உபாசனையிலும் உபநிஷத் ஞானப் பிரிவுகளிலும் கூட யோகமே பிரதானமான சாதனா மார்க்கமாக குறிப்பிடப்படுகிறது. ஸ்ருதி, ஸ்மிருதி, புராணம், இதிகாசம் இவற்றில் முக்கியமாக கூறப்படும் யோக சாஸ்திரங்களில் உள்ளவற்றின் மிகச் சிறு பகுதிக்கே உலகம் மகிழ்ந்து பாராட்டி வருகிறது. நம் ஹிந்து யோகா வித்யை விஸ்வம் அனைத்திற்கும் செறிவூட்டும் சாதனை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
வெறும் தம் மதமே உயர்ந்தது என்ற மூடத்தனம் மட்டுமே கொள்கையாகக் கொண்ட பிற மதத்தவர்கள் ஹிந்துமத தர்மத்தில் பல யுகங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வாழ்வியல் முறைகளை தம் மதத்தோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விபரீத சேஷ்டைகள் செய்து வருவதோடு இந்த அற்புதமான யோக வித்யை இந்துக்களுடையது மட்டுமே அல்ல என்று மூர்க்க வாதங்களில் ஈடுபடுகின்றனர்.