ஒரு மணிநேரம் கழித்து, அதே விக்டோரியா டெரிமினஸ் ரயில் நிலையத்திலிருந்து, திகம்பர் பாட்கேயும், சங்கர் கிஷ்டய்யாவும், மெட்ராஸ் மெயிலில், பூனாவிற்கு புறப்பட்டனர்.
மெட்ராஸ் மெயில் பூனாவிற்கு செல்லும் பயணிகளை அனுமதிப்பதில்லை. ஆனால் பாட்கே போன்று பலமுறை டிக்கெட்டே இல்லாமல் வித் அவுட்டில் பயணம் செய்து அனுபவப்பட்ட நபருக்கு இது பெரிய விஷயமே இல்லை.
இரண்டு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு, ரெயில் புறப்பட்ட நேரத்தில், ஒரு பெட்டிக்குள், சங்கர் கிஷ்டய்யாவுடன் தாவி ஏறிக் கொண்டார். அடுத்த முனையில், டிக்கெட் கலெக்டருக்கு ஒரு சிறு தொகையை டிப்ஸாக கொடுத்து விட்டு மெல்ல நழுவி விட முடியும் என்பது அவருடைய அனுபவத்தால் அவருக்குத் தெரியும்.
அந்த 1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 15ஆம் தேதி வியாழக்கிழமை இரவில் ஆப்தேயை தவிர மற்ற எல்லோரும் பம்பாயை விட்டு புறப்பட்டு விட்டனர். கொஞ்சம் பணம் திரட்ட பம்பாயில் தங்குவதாக நண்பர்களிடம் கூறியிருந்தாலும் அதற்கு மேலும் அவரது மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
காந்தியை கொலை செய்து விட்டு மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி விட முடியும் எனும் நம்பிக்கையெல்லாம் ஆப்தேயிற்கு இல்லை. மனோரமா சால்வேயிடம், தானும் தன்னுடைய நண்பர்களும் சேர்ந்து செய்ய திட்டமிட்டிருந்தது பற்றி எடுத்துக் கூறி இறுதியாக தாங்கள் பிரிவதற்கு மனோரமாவின் மனதை ஆப்தே தயார் செய்ய வேண்டி இருந்தது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு SEA GREEN HOTEL (SOUTH)ல் ரூம் நம்பர் 6ஐ தன் பெயரில் எடுத்து வைத்திருந்தார் ஆப்தே.
தங்கள் திட்டத்தின் ஒரு கட்டமாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில், SEA GREEN HOTEL (NORTH) ல் தங்க வேண்டியிருந்தால் இரு ஹோட்டல்களும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் இயங்குவதையும், ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு அப்படியே செல்ல முடியாது, முதலில் சாலைக்கு வந்து விட்டுதான் போக முடியும் என்று கூற முடியும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.
அந்த இரண்டு நாட்களும் பணம் திரட்ட ஆப்தே போகவே இல்லை. பெரும்பாலும் நேரம் மனோரமா சால்வே, ஆப்தேயுடனேயே இருந்தார். தான் ஆதரவற்று தனித்து விடப்பட்டு விட்டோம் எனும் மனத்தாங்கலுடன் அவர் இருந்தார்.
பின்னாளில்,காந்தி கொலை வழக்கின் போது வாக்குமூலம் அளித்த மனோரமா சால்வே கூறினார் :
’’ நான் நடக்க இருப்பதைக் கேள்விப்பட்டு மன அமைதி இழந்து அழுது கொண்டே இருந்தேன்’’
.ஆப்தே என்னை தேற்ற முயன்றார்.தனக்கு ஏதாவது நேரிட்டால் மனம் கலங்க வேண்டாம் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க முயற்சிக்கும்படியும் கூறினார். ஆனால் அது அவ்வளவு எளிதாக நடக்கக் கூடிய காரியம் அல்ல.
கிட்டத்தட்ட மனோரமாவின் வாழ்வு அஸ்தமித்து விட்டதென்றே கூற வேண்டும். அவர் இன்னும் தன் 20 வயதில்தான் இருந்தார். ஆப்தே மீது மோகம் கொண்டிருக்கா விட்டால் இன்னும் மூன்று மாதத்தில் B.A. பரிட்சை எழுதி இருக்க முடியும்…
சால்வி குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆகி இருக்க முடியும்; அவர்கள் சமூகத்தில் கல்லூரி வரை சென்று படித்த பெண்மணிகளில் ஒருவர் என்ற பெயர் கிடைத்திருக்க முடியும்…
அழகான எதிர்காலம், வசதிமிக்க கணவன்,அவர் விரும்பியிருந்தால் நல்ல வேலை, எல்லாம் கிடைத்திருக்கும்…. ஆனால் இப்போதோ, பட்டமும் இல்லை, திருமணமும் இல்லை. திருமண பந்தத்தில் இல்லாது ஒரு குழந்தையை சுமக்க வேண்டிய அவமானகரமான நிலை….
அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த ,அந்த மிஷினரி கிறிஸ்துவ சூழ்நிலையில், அவரும்,அவரது குடும்பமும் தொடமாட்டாத குஷ்டரோகிகள் போல் காட்சித் தருவர்… எந்த மனிதனுக்காக இந்த நிலையை வரவழைத்துக் கொண்டாரோ, அந்த மனிதர், ஒரு மர்மமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
அந்த பயணத்திலிருந்து அவர் திரும்பி வர போவதில்லை என்பதுதான் கண் முன்னே தெரிந்த காட்சி…
மனோரமா சால்வி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ,அவருக்கு காத்திருந்தது ஒரு ஹிந்து விதவையின் வாழ்க்கை, வெறுமையை நோக்கிய ஒரு வாழ்க்கை பயணம்…
காந்தியின் கொலையில் மனோரமா சால்வியின் பங்கு எதுவும் இல்லை. ஆனால் கொலையாளிகளுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை விட மோசமான தண்டனை அவருக்கு கிடைத்து விட்டது.
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்